கருப்புபணத்தை ஒப்புக்கொள்ள அவகாசம் வழங்குவது முழு பொதுமன்னிப்பு அல்ல என்று மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் பதுக்கி யுள்ள கருப்பு பண விவரங்களை தானாக முன் வந்து ஒப்புக்கொள்ள அவகாசம் அளித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன்படி, கருப்புபணம் மற்றும் சொத்து விவரங்களை ஜூன் 1 முதல் செப்டம்பர் 31 வரை தெரிவிக்கலாம். இவ்வாறு விவரங்களை அளிப் பவர்கள் கருப்பு பணம் மற்றும் சொத்துமதிப்பில் 30 சதவீத வரி, 7.5 சதவீதம் கூடுதல் கட்டணம் மற்றும் 7.5 சதவீதம் அபராதம் செலுத்தவேண்டும். இவர்கள் மீது வருமானவரி சட்டம் அல்லது சொத்துவரி சட்டத்தின்கீழ் எந்த நடவடிக்கையும், விசாரணையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நேரடிவரிகள் ஆணையம் இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி வரிகள் ஆணைய தலைவர் அதுலேஷ் ஜிண்டால் கூறுகையில், ‘‘கருப்புபணம் பதுக்கியுள்ளவர்கள் அபராதம் மற்றும் வரி செலுத்துவதற்கு அளிக்கப்படும் குறுகிய கால அவகாசம் இது. இதை வழக்கில் இருந்து முழுவதுமாக தப்பிப்பதற்கான பொதுமன்னிப்பாக கருதக்கூடாது. அதேநேரத்தில், மேற்கண்ட விவரங்களை அளிப்போர், தங்களது சொத்து மற்றும் வருமானம் ஊழல், போதை, கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களின் மூலம் சேர்க்கப்பட்டது அல்ல என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய பிரிவுகளில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’’ என்றார்.