இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதிகள், வெளிநாடுவாழ் ஈழத் தமிழர்கள் அடங்கிய குழு சென்னையில் தமிழக பாஜக தலைவர்களுடன் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக் சபா தேர்தலுக்குப் பின்னர் ஈழத் தமிழர் தலைவர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்துவருகை தருகின்றன. இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, தமிழ் எம்.பிக்கலை சந்தித்து டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஈழத்தமிழர்குழு ஒன்று நேற்று சென்னை வருகைதந்தது. பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் தலைவர்களை ஈழதமிழர்கள் குழு சந்தித்து பேசியது. இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், திருகோண மலை மாவட்டத் தமிழரசு கட்சித்தலைவர் குகதாஸன், பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் ஞாநி, ஆஸ்திரேலிய தமிழ்காங்கிரஸின் இளங்கோ மற்றும் நிரஞ்சன் நந்தகோபன் ஆகியோர் அடங்கிய குழுவுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், எம்.பி. இல, கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எப்படியான தீர்வை எட்டுவது என விவாதிக்கப் பட்டிருக்கிறது. அத்துடன் இதுதொடர்பான ஆலோசனைகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது எனவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளது.