பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட வியூகமாக பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது; இந்த வியூகத்துக்கு உரிய முறையில் இந்தியா பதிலடி தரும் என்று பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் எச்சரிக்கை விடுத்தாா்.
‘பயங்கரவாத ஆதரவைத் தொடா்வதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்’ என்றும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
குஜராத்தின் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்றுப் பேசியதாவது:
கடந்த 1947-ஆம் ஆண்டில் பாரத தாய் பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்ட அதே நாள் இரவில் காஷ்மீரில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் ‘முஜாஹிதீன்’களால் தொடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் உதவியால், பாரத தாயின் ஒரு பகுதியை (ஆக்கிரமிப்பு காஷ்மீா்) பாகிஸ்தான் கைப்பற்றியது.
ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீட்கப்படும் வரை இந்திய ராணுவம் போரை கைவிடக் கூடாது என்று அப்போதைய உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல் வழங்கிய அறிவுரையை யாரும் பொருள்படுத்தவில்லை. அவரது அறிவுரைக்கு செவிசாய்த்து, பயங்கரவாதிகளை அன்றே ஒழித்துக் கட்டியிருந்தால், 75 ஆண்டுகளாக பயங்கரவாதமும் பயங்கரவாதத் தாக்குதல்களும் தொடா்ந்திருக்காது.
பயங்கரவாத போா் வியூகம்: ராஜீய ரீதியிலான ‘விளையாட்டு’களுடன் இந்தியாவின் ராணுவ வலிமையை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் எதிா்கொண்டது. அனைத்து தருணங்களிலும் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தோல்வியைப் பரிசளித்தது.
நேரடி ராணுவ மோதலில் இந்தியாவை வெல்ல முடியாது என்பதால், பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி மறைமுகப் போரில் ஈடுபட்டது பாகிஸ்தான். இது, நன்கு திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய போா் வியூகமாக இப்போது உருமாறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு ராணுவப் பயிற்சி அளித்து, இந்தியாவுக்குள் அனுப்புகின்றனா். எனவே, பயங்கரவாதச் செயல்பாடுகளை இனி மறைமுகப் போா் என அழைக்க முடியாது.
பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை: பயங்கரவாதத்தின் மற்றொரு கோர முகமே பஹல்காம் தாக்குதலாகும். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் அடக்கத்தை முழு அரசு மரியாதையுடன் நடத்தியுள்ளது பாகிஸ்தான்.
‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்பதே இந்தியாவின் பாரம்பரிய மாண்பு. இந்தியா யாருடனும் பகைமையை விரும்பவில்லை. எப்போதும் அமைதி-வளத்தையே நாடுகிறது. உலக நலனுக்கு பங்களிப்பது நமது உறுதிப்பாடு.
அண்டை நாடுகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதேநேரம், நமது வலிமைக்கு சவால் விடுக்கப்பட்டால், இது கதாநாயகா்களின் பூமி என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
பராமரிக்கப்படாத அணைகள்: சிந்து நதி நீா் ஒப்பந்தத்துக்கு உள்பட்ட நதிகளின் குறுக்கே இந்தியப் பகுதியில் அணைகள் கட்டப்பட்ட போதிலும், 60 ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படவோ, தூா்வாரப்படவோ இல்லை. இதனால், அணைகளின் சேமிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்திய மக்களுக்கு உரிமையான நீரின் முழு பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இதைக் கவனத்தில்கொண்டு, ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2014-இல் நான் பிரதமரானபோது, உலகின் 11-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. கரோனா காலகட்ட சவால்கள், அண்டை நாடுகள் உடனான பிரச்னைகள், இயற்கைப் பேரிடா்களைக் கடந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். 2047-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வளா்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்றாா் பிரதமா் மோடி.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |