குழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதற்கில்லை. ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுப்பட்டு விடுகிறோம். சிலரே இந்த வலையிலிருந்து விடுபடுகின்றார்கள்.
மனிதர்கள் எப்பொழுதும் மனைவி செல்வம் புகழ், இவற்றின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறார்கள், சில வேளைகளில் அவர்கள் தலையில் பலத்த அடி விழுகிறது. அப்பொழுது உண்மையில் இந்த உலகம் என்ன ? அது எத்தன்மையது? என்பதை உணர்கிறார்கள். இவ்வுலகில் இறைவனைத் தவிர வேறு ஒன்றையுமே எவராலும் நேசிக்க இயலாது. மானிட அன்பு எவ்விதச் சாரமும் அற்றது என்பதை மனிதன் உணர்கிறான். மனிதனால் நேசிக்க இயலாது. பேசுவதெல்லாம் வெறும் பேச்சுத்தான். மனைவி தன் கணவனை நேசிப்பதாகக் கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறாள். ஆனால் அவன் இறந்தவுடன் முதலில் அவன் நினைவெல்லாம் அவன் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்பதைப் பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும்தான். கணவன், மனைவியை நேசிக்கிறான். ஆனால் மனைவி உடல்நலம் குறைந்து அழகு குன்றினால் அல்லது விகாரமடைந்தால், அல்லது அவள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அவளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.
good essay