தேசத்தின் தீரம் நிறை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது. 10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள், 125 கோடி நாட்டுமக்களான நம்மனைவரையும் காக்கும் பொருட்டுத் தங்களையே இழந்திருக்கிறார்கள். நாட்டுமக்கள் நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக, நம்முடைய இந்த வீர மைந்தர்கள், இரவு பகல் எனப்பாராமல் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள். புல்வாமாவின் தீவிரவாதத் தாக்குதலில், நெஞ்சுரம் நிறைந்த நம் வீரர்களின் தியாகத்திற்குப் பிறகு, நாட்டுமக்களின் மனங்கள் காயமடைந்திருக்கின்றன, கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன.

 

தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பாக நாலாபுறத்திலிருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக உங்கள் மனங்களிலும் என் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆவேசமும் கொதிப்பும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் கனன்று கொண்டிருக்கிறது, மனிதநேயம் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் உலகின் அனைத்து மனிதநேய சக்திகளுக்குள்ளும் கொதிப்பு இருக்கிறது. பாரத அன்னையைக் காக்க, தங்களது உயிர்களை அர்ப்பணம் செய்யும், தேசத்தின் தீரம் நிறை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தத் தியாகம், தீவிரவாதத்தை வேரடி மண்ணோடும் அழிக்க நமக்கு நிரந்தரமாக உத்வேகம் அளிக்கும், நமது மனவுறுதியை மேலும் பலப்படுத்தும். தேசத்தின் முன்பாக இருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ளும் பணியை, நாமனைவரும் சாதியவாதம், மதவாதம், பிராந்தியவாதம் போன்ற அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மேற்கொள்ளவேண்டும்; அப்போது தான் தீவிரவாதத்திற்கு எதிராக நமது முனைப்புகளும் முடிவுகளும் உறுதியாக, கடுமையாக, முடிவேற்படுத்துவதாக அமையும். நமது ஆயுதப்படையினர் என்றைக்கும் எப்போதும் யாருக்கும் சளைக்காத சாகசத்தையும், பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

 

அமைதியை நிலைநிறுத்த ஒருபுறம் அவர்கள் தங்கள் மிகச்சிறப்பான திறமையை வெளிக்காட்டும் அதே வேளையில், தாக்குதல் தொடுப்பவர்களுக்குப் புரியக்கூடிய அதே மொழியிலேயே பதிலிறுக்கும் பணியையும் புரிந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடுக்கப்பட்ட 100 மணி நேரத்திற்குள்ளாகவே எந்த வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நீங்களே பார்க்கலாம். தீவிரவாதிகளையும் அவர்களுக்குத் துணை செல்பவர்களையும் வேரோடு கெல்லி எறியும் உறுதிப்பாட்டை இராணுவத்தினர் மேற்கொண்டிருக்கிறார்கள். வீரம்நிறை இராணுவத்தினரின் உயிர்த்தியாகத்திற்குப் பிறகு, ஊடகங்கள் வாயிலாக அவர்களின் உறவினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் உத்வேகம் அளிக்கும் சொற்களும், கருத்துக்களும் பரவலாக்கம் செய்யப்பட்டு, நாடு முழுமையிலும் மன வலுவைக் கூட்டி பலம் அளித்திருக்கின்றன. பிஹாரின் பாகல்புரைச் சேர்ந்த தியாகி ரத்தன் டாக்குரின் தந்தையார் ராம்நிரஞ்ஜன் அவர்கள், இந்த துக்ககரமான வேளையிலும் கூட, தன் உள்மனக் கிடக்கையை வெளியிட்டிருப்பது நம்மனைவருக்குமே உத்வேகம் அளிக்கிறது. எதிரிகளோடு போரிட தனது இரண்டாவது மகனையும் அனுப்புவேன் என்றும், தேவைப்பட்டால் தானுமே கூட களத்தில் இறங்கத் தயார் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒடிஷாவில் ஜகத்சிங்புரைச் சேர்ந்த தியாகி பிரசன்னா சாஹூவின் மனைவி மீனா அவர்களின் எல்லையற்ற சாகசத்தை நாடுமுழுவதும் போற்றுகிறது. தனது ஒரே மகனையும் மத்திய எல்லைப்புறப் பாதுகாப்புப் படையில் சேர்ப்பேன் என்று சபதம் அவர் ஏற்றுள்ளார். மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்ட தியாகி விஜய் ஷோரேன அவர்களின் பூதவுடல் ஜார்க்கண்டின் கும்லாவை அடைந்தபோது, அவரது பிஞ்சு மகன், நானும் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவேன் என்று சூளுரைத்தான். இந்தப் பிஞ்சு உள்ளத்தின் பேராவல் தான் இன்று பாரதநாட்டின் ஒவ்வொரு குழந்தையின் உடலுக்குள்ளே, ஊனுக்குள்ளே, உயிருக்குள்ளே கலந்த உணர்வாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படிப்பட்ட உயிர்ப்புள்ள உணர்வுகளைத் தான் நமது வீர தீர பராக்கிரமசாலிகளான தியாகிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் நம்மால் காணமுடிகிறது. நமது எந்த ஒரு வீரருமோ, அவர் தம் குடும்பமுமோ இதற்கு விதிவிலக்கல்ல. அது தேவரியாவின் தியாகி விஜய் மௌர்யாவின் குடும்பத்தாராகட்டும், காங்க்டாவின் தியாகி திலக்ராஜின் பெற்றோராகட்டும் அல்லது கோடாவைச் சேர்ந்த தியாகி ஹேம்ராஜின் ஆறு வயதே நிரம்பிய பாலகனாகட்டும் – தியாகிகளின் ஒவ்வொரு குடும்பத்தின் கதையும், உத்வேகத்தின் ஊற்றுக்கண்ணாய், உள்ளத்தைக் கரைப்பதாய் இருக்கின்றது.

 

இந்தக் குடும்பங்கள் எந்த உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனவோ, எந்த இலக்கை சுட்டுகின்றனவோ, அவற்றை நாம் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று நான் இளைய சமுதாயத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசபக்தி என்றால் என்ன, தியாகம் – தவம் என்றால் என்ன, என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ள நாம் வரலாற்றின் கடந்த கால ஏடுகளைப் புரட்டிப் பார்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. நமது கண்களின் முன்னே, காட்சிப்பொருளாக, தெள்ளத் தெளிவாக, வாழும் எடுத்துக்காட்டுக்களாக இவர்கள் மலையென உயர்ந்து நிற்கிறார்கள், ஒளிபடைத்த பாரதத் திருநாட்டின் எதிர்காலத்துக்கான உத்வேகக் காரணிகள் இவர்கள் தாம், இவர்களே நமது கலங்கரை விளக்கங்கள்!

என் உயிரினும் மேலான என் நாட்டுமக்களே… சுதந்திரம் கிடைத்து இத்தனை நீண்டகாலம் வரை, நாமனைவரும் எந்தப் போர் நினைவுச் சின்னத்துக்காக காத்திருந்தோமோ, அந்தக் காத்திருப்புக் காலம் நிறைவடையவிருக்கிறது. இது தொடர்பாக நாட்டுமக்களின் பேராவலும் உற்சாகமும் இருப்பது இயல்பான விஷயம் தான். NarendraModiAppஇல் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியைச் சேர்ந்த ஸ்ரீ ஓங்கார் ஷெட்டி அவர்கள் தேசிய போர் நினைவுச் சின்னம் உருவாக்கம் அடைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். நம் பாரத நாட்டில் இதுவரை எந்த ஒரு தேசிய அளவிலான போர் நினைவுச் சின்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஒருசேர அளிக்கிறது. தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிர்களையே துச்சமென மதித்து அர்ப்பணம் செய்த வீரர்களின் தீரக்கதைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமாக அது இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படிப்பட்ட ஒரு நினைவுச் சின்னம் நாட்டில் கண்டிப்பாக ஏற்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று நான் உறுதி பூண்டேன்.

நாங்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தை நிர்மாணம் செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டோம்; இந்த நினைவுச் சின்னம் இத்தனை குறுகிய காலகட்டத்தில் தயாராகியிருப்பது எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. நாளை அதாவது பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியன்று நாம் கோடிக்கணக்கான ந்மது நாட்டு மக்களுக்கும் நமது இராணுவத்துக்கும் இந்த தேசிய இராணுவ நினைவகத்தை அர்ப்பணம் செய்வோம். தேசம், இராணுவத்திற்கு தான் பட்டிருக்கும் கடனைத் திரும்பச் செலுத்தும் வகையிலான மிகச் சிறிய முயற்சியாக இது அமையும்.

தில்லியின் இருதயம் என்று சொன்னால் அது இண்டியா கேட், அமர் ஜவான் ஜோதி ஆகியன இருக்குமிடம் தான். அதற்கு மிக அருகிலேயே, இந்தப் புதிய நினைவகம் உருவாகியிருக்கிறது. இது தேசிய இராணுவ நினைவகமாக நாட்டு மக்கள் மனங்களில் இடம் பிடிக்கும், ஒரு புனித தலத்திற்கு ஒப்பாக இது அமையும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. தேசிய இராணுவ நினைவகம், சுதந்திரத்திற்குப் பிறகு உச்சகட்ட தியாகத்தைப் புரிந்த வீரர்களின் பொருட்டு தேசத்தின் நன்றியறிதலைக் குறிக்கின்றது.

நினைவகத்தின் வடிவமைப்பு நமது அமரர்களான வீரர்களின் வெல்லமுடியாத சாகசத்தைக் காட்சிப்படுத்துகிறது. தேசிய இராணுவ நினைவகத்தின் கருத்தாக்கம், 4 பொதுமைய வட்டங்கள் அதாவது 4 சக்கரங்களை மையமாகக் கொண்டது; இதிலே ஒரு வீரனின் பிறப்பு தொடங்கி, தியாகம் வரையிலான பயணம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அமர் சக்கரத்தின் ஜ்வாலை, தியாகியான வீரனின் அமரத்துவத்தைக் குறிக்கிறது. இரண்டாவது சக்கரம், வீரத்தைக் குறிக்கும் சக்கரம், இது வீரர்களின் சாகசத்தையும், தீரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் காட்சிக்கூடத்தின் சுவர்களில் வீரர்களின் வீரதீர சாகசச் செயல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் தியாகச் சக்கரம்; இந்தச் சக்கரம் வீரர்களின் தியாகத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
இதில் தேசத்திற்காக சர்வபரித்தியாகத்தை அளித்த வீரர்களின் பெயர்கள் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் ரக்ஷக் சக்கரம், பாதுகாப்பினைக் குறிக்கிறது. இந்தச் சக்கரத்தில் அடர்ந்த மரங்களின் வரிசை இருக்கிறது. இந்த மரங்கள் வீரர்களைக் குறிக்கின்றன, தேசத்தின் குடிமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இது சொல்லும் சேதி என்ன தெரியுமா?…….

நாட்டின் எல்லைகளில் ஒவ்வொரு கணமும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள், ஆகையால் நாட்டுமக்கள் பாதுகாப்பாக உணரலாம் என்பது தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமேயானால், தேசிய இராணுவ நினைவகத்தை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றால், அந்த இடத்தில் நாட்டின் மகத்துவம் நிறைந்த தியாகிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும், நமது நன்றியறிதல்களைக் காணிக்கையாக்கவும், அந்த தியாகிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளவும் மக்கள் அங்கே வருவார்கள்!

தேசத்திற்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் பற்றிய தியாகக் கதைகள் இங்கே இருக்கும்; இவற்றை நாம் கண்ணால் பார்த்து, உணர்வால் உயிர்க்கும் போது, நாம் வாழ, நாம் பாதுகாப்போடு இருக்க, நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இவர்கள் தங்களையே தியாகம் செய்தார்கள் என்ற உணர்வு நம் உயிர் மூச்சுக்களில் நிறையும். நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு நமது ஆயுதப்படையினர், காவல்துறையினர், துணை இராணுவப் படையினர் ஆகியோரின் மகத்தான பங்களிப்பினை, சொற்களில் வடிப்பது என்பது இயலாத ஒன்று. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய காவல்துறை நினைவகத்தை தேசத்திற்கு அர்ப்பணம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. எல்லாக் காலங்களிலும் பாதுகாப்பிலே ஈடுபட்டிருக்கும் நமது காவல்துறையைச் சார்ந்த ஆண்கள்-பெண்களிடத்தில் நாம் நன்றியோடு இருக்கவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாகவே இந்த நினைவகமும் உருவாக்கப்பட்டது. நீங்கள் கண்டிப்பாக தேசிய இராணுவ நினைவகத்துக்கும், தேசிய காவல்துறை நினைவகத்துக்கும் செல்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த இடங்களுக்கு நீங்கள் எப்போது சென்றாலும், அங்கே நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்; இதனால் மற்றவர்களும் இவற்றைப் பார்த்து உத்வேகம் பெற்று, இந்தப் புனிதமான இடங்களுக்குச் செல்லும் ஆர்வம் ஏற்படும்.

எனதருமை நாட்டுமக்களே! மனதின் குரலுக்காக உங்களின் ஆயிரக்கணக்கான கடிதங்களும் கருத்துக்களும், பல்வேறு வழிகளில் என்னை வந்து சேர்கின்றன. இந்த முறை நான் உங்கள் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்த போது, அதில் ஆதிஷ் முகோபாத்யாயா அவர்களின் சுவாரசியமான ஒரு கருத்து என் கவனத்தை ஈர்த்தது. 1900ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று ஆங்கிலேயர்கள் பிர்ஸா முண்டாவைக் கைது செய்த போது அவரது வயது வெறும் 25 தான். அதே போல மார்ச் மாதம் 3ஆம் தேதி தான் ஜம்சேட்ஜி டாடா அவர்களின் பிறந்த நாள் என்பதும் கூட ஒரு தற்செயல் நிகழ்வு தான் என்று எழுதியிருக்கிறார். மேலும் அவர், இந்த இரண்டு மனிதர்களும் முழுமையாக இருவேறுபட்ட குடும்பப் பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த இருவருமே ஜார்க்கண்டின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையுமே நிறைவானதாக ஆக்கியிருக்கின்றார்கள். மனதின் குரலில் பிர்ஸா முண்டா, ஜம்சேட்ஜி டாடா ஆகியோருக்கு ச்ரத்தாஞ்சலிகளை அளிப்பது என்பது ஒருவகையில் ஜார்க்கண்டின் கௌரவமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுவதற்குச் சமமானதாகும். ஆதிஷ் அவர்களே, நீங்கள் கூறுவதை நான் முழுமையாக ஏற்கிறேன். இந்த இரண்டு மகத்தான மனிதர்கள் ஜார்க்கண்டின் பெயரை மட்டுமல்ல, நாடு முழுவதன் பெயருக்குமே ஒளி கூட்டியிருக்கின்றார்கள். நாடு முழுமையுமே இவர்களின் பங்களிப்பிற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நமது இளைஞர்களுக்கு வழிகாட்டுதலுக்காக ஒரு உத்வேகம் நிரம்பிய மனிதர் இன்று தேவைப்படுகிறார் என்றால், அவர் தான் பகவான் பிர்ஸா முண்டா.

ஆங்கிலேயர்கள் கயமைத்தனமாகவும் நயவஞ்சகமாகவும் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஏன் இப்படிப்பட்டதொரு கயமையைக் கைக்கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், அத்தனை பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஆங்கிலேயர்கள் கூட அவரைக் கண்டு அஞ்சினார்கள் என்பதால் தான். பகவான் பிர்ஸா முண்டா தனது பாரம்பரியமான வில் அம்புகளின் துணை கொண்டு, துப்பாக்கிகள் பீரங்கிகளைப் பயன்படுத்தும் ஆங்கிலேய ஆட்சியை உலுக்கியிருந்தார். உண்மையில் மக்களுக்கு கருத்தூக்கம் அளிக்கக்கூடிய ஒரு தலைமை கிடைக்குமானால், ஆயுதங்களின் சக்தியை விட சமூகத்தின் மனவுறுதி மிகப் பெரியதாகி விடுகிறது. பகவான் பிர்ஸா முண்டா ஆங்கிலேயர்களோடு அரசியல் சுதந்திரத்திற்காக மட்டும் போரிடவில்லை, அவர் பழங்குடியினத்தவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் போராடினார். தனது குறுகியகால வாழ்க்கையில் அவர் இவையனைத்தையுமே செய்து காட்டினார். வஞ்சிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு இலக்கானவர்கள் ஆகியோரை இருள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஒளிபடைத்த சூரியனை நோக்கி அழைத்துச் சென்றார். பகவான் பிர்ஸா முண்டா தனது 25 ஆண்டு கால வாழ்க்கை முடிவில் தியாகியானார். பிர்ஸா முண்டாவைப் போல பாரத அன்னையின் சத்புத்திரர்கள், தேசத்தின் அனைத்து பாகங்களிலும் தோன்றியிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த சுதந்திரப் போரில் பங்களிப்பு அளிக்காத பகுதி என்ற ஒன்றை இந்தியாவில் எங்குமே காணமுடியாது எனும்படியாக அங்கிங்கெனாதபடி அனைத்து இடங்களிலும் இப்படிப்பட்ட மஹா புருஷர்கள் நிரம்பியிருந்தார்கள். ஆனால் துர்பாக்கியம் என்னவென்றால் இவர்களின் தியாகம், சூரம், தியாகம் பற்றிய கதைகள் புதிய தலைமுறையினரைச் சென்று சேரவே இல்லை. பகவான் பிர்ஸா முண்டா போன்றவர்கள் நம் இருப்பை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றால், ஜம்சேட்ஜி டாடா போன்ற மனிதர்கள் தேசத்திற்கு மகத்தான நிறுவனங்களை அளித்தார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஜம்சேட்ஜி டாடா அவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தீர்க்கதரிசி. அவர் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் பார்க்கவில்லை, அதற்கான பலமான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார். பாரதத்தை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் அச்சாணியாக ஆக்குவது தான் எதிர்காலத் தேவையாக இருக்குமென்று அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.

 

அவரது தொலைநோக்கு காரணமாகவே Tata Institute of Science நிறுவப்பட்டு, இப்போது அது இந்திய அறிவியல் கழகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல, அவர் டாடா ஸ்டீல் போன்ற நம்பகத்தன்மை மிகுந்த பல நிறுவனங்களையும் தொழில்களையும் நிறுவினார். ஜம்சேட்ஜி டாடாவும் ஸ்வாமி விவேகானந்தரும் அமெரிக்கப் பயணத்தின் போது ஒரு கப்பலில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது இருவரின் உரையாடல்களும், ஒரு மகத்துவம் நிறைந்த விஷயமான, பாரத நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பரவலாக்கத்தை ஒட்டி அமைந்தது. இந்த உரையாடலின் விளைவாகவே இந்திய அறிவியல் கழகம் பிறந்தது.
என் அன்புநிறை நாட்டுமக்களே, நம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மொரார்ஜி பாய் தேசாய் அவர்களின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் 29ஆம் நாள். இந்த நாள் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பதை நீங்கள் அனைவருமே அறிவீர்கள். உள்ளபடியே, அமைதி நிரம்பிய நபரான மொரார்ஜி பாய் அவர்கள் மிக ஒழுங்குமுறை நிரம்பிய நாட்டின் தலைவர்களில் ஒருவர். சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் மிக அதிகமாக வரவுசெலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்த சாதனை மொரார்ஜி பாய் தேசாய் அவர்களையே சாரும். மொரார்ஜிபாய் தேசாய் மிகக் கடினமான வேளையில் பாரதத்துக்கு திறன்மிகு வகையில் தலைமை தாங்கினார், அந்தக் காலகட்டத்தில்,

 

நாட்டின் மக்களாட்சி முறை பெரும் அச்சுறுத்தலில் இருந்தது. இதன் பொருட்டு இனிவரும் தலைமுறையினரும் கூட நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் ஜனநாயகத்தின் பாதுகாக்க வேண்டி அவசரநிலைக்கு எதிராக தன்னையே அர்ப்பணித்தார். இதற்காக தனது வயோதிகத்தில் அவர் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது. அப்போதிருந்த அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது தேசத்தின் பிரதமரானார் அவர். அவரது ஆட்சிக்காலத்தில் தான் 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது ஏன் மகத்துவம் நிறைந்தது என்றால், அவசரநிலையை பிறப்பிப்பதற்காக 42ஆவது அரசியல்சட்டத் திருத்தம் அப்போது கொண்டு வரப்பட்டது, இதில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைப்பது தவிர, அதில் இடம் பெற்றிருந்த வேறு சில ஷரத்துக்கள், நம்முடைய ஜனநாயக விழுமியங்களைச் சிதைத்துவிட்டன, எனவே அவை திரும்பப் பெறப்பட்டன. அதாவது 44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் செயல்பாடுகளை, செய்தித்தாள்களில் அச்சிட அதிகாரம் வழங்கும் ஷரத்து ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, உச்சநீதிமன்றத்தின் சில அதிகாரங்கள் மீண்டும் அளிக்கப்பட்டன.

 

44ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் உட்பிரிவு 20, 21க்கு உட்பட்டு அளிக்கப்படும் அடிப்படை உரிமைகள், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டாலும் கூட, பறிக்கப்பட முடியாத வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அமைச்சரவை எழுத்து வடிவில் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மட்டுமே குடியரசுத்தலைவர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த முடியும் என்ற வழிமுறை முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் அவசரநிலையின் கால அளவை ஒரு முறையில் 6 மாதங்களுக்கு மேல் அதிகரிக்க முடியாது. அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, 1975ஆம் ஆண்டு எப்படி ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதோ, அது மீண்டும் அரங்கேற முடியாமல் தடுக்க இந்த வகையில் மொரார்ஜி பாய் அவர்கள் உறுதிசெய்தார். இந்திய ஜனநாயகத்தின் மாட்சிமையைப் பாதுகாக்க அவரது பங்களிப்பு மகத்தானது, இனிவரும் தலைமுறையினர் அதை என்றுமே நினைவில் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைவருக்கு மீண்டும் ஒருமுறை நான் என் ச்ரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

 

என் மனம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த முறையும் பத்ம விருதுகள் தொடர்பாக மக்களிடையே பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இன்று நாம் ஒரு புதிய இந்தியாவை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் அடிமட்டத்தில் யார் விருப்பு வெறுப்பற்ற நிலையில் பணியாற்றுகிறார்களோ, அவர்களுக்கு கௌரவம் அளிக்க நாம் விரும்புகிறோம். தங்கள் உழைப்பின் துணை கொண்டு பல்வேறு வகைகளில் மற்றவர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் தாம் உண்மையான கர்மயோகிகள். இவர்கள் மக்கள்சேவை, சமூகசேவை, இவை எல்லாவற்றையும் விட நாட்டின் சேவையை சுயநலமே இல்லாத முறையில் செய்கிறார்கள்.

பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் வேளையில், விருது பெற்றிருக்கும் இவர் யார் என்று மக்கள் வினவுவதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒரு வகையில் இதை நான் மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன் ஏனென்றால், இவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் ஆகியவற்றின் அட்டைகளில் காணப்படமாட்டார்கள். இவர்கள் பகட்டு நிறைந்த உலகத்திலிருந்து விலகி இருப்பவர்கள். ஆனால், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தங்களுக்குப் பெயர் ஏற்பட வேண்டுமே என்ற கவலை கொஞ்சமும் இல்லாதவர்கள், களத்தில் இறங்கிப் பணியாற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்கள். யோக: கர்மாஸு கௌஷலம் என்ற கீதாவாக்கியத்தை அடியொற்றி இவர்கள் வாழ்பவர்கள். இப்படிப்பட்ட சிலரைப் பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒடிஷாவின் தைதாரி நாயக் பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்கலாம், அவரை canal man of Odisha என்று அழைப்பதில் காரணமில்லாமல் இல்லை. தைதாரி நாயக் அவர்கள் தனது கிராமத்தில் தனது கைகளாலேயே மலையை வெட்டி மூன்று கிலோமீட்டர் வரை கால்வாய் பாதையை அமைத்திருக்கிறார். தனது உழைப்பு காரணமாக நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவை ஏற்படுத்தினார். குஜராத்தின் அப்துல் கஃபூர் கத்ரி அவர்களை எடுத்துக் கொள்வோமே!! இவர் கட்ச் பகுதியின் பாரம்பரியமான ரோகன் ஓவிய வடிவத்திற்கு புத்துயிர் அளிக்கும் அற்புதமான செயலைப் புரிந்திருக்கிறார். இந்த அரியவகை ஓவிய முறையை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான வேலையை இவர் புரிந்திருக்கிறார். அப்துல் கஃபூர் வாயிலாக உருவாக்கப்பட்ட Tree of Life ஓவியப் படைப்பைத் தான் நான் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பராக் ஓபாமா அவர்களுக்கு நினைவுப் பரிசாக அளித்தேன். பத்ம விருது பெற்றவர்களில் மராட்வாடாவைச் சேர்ந்த ஷப்பீர் சைய்யத் அவர்கள் பசுத்தாயின் சேவகனாக அறியப்படுபவர். அவர் எப்படிப்பட்ட வகையில் தனது வாழ்க்கை முழுவதையும் பசுத்தாயின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மிகவும் அலாதியானது,

 

அற்புதமானது. மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவர் பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் பங்களிப்பிற்கான முயற்சிகளை முதன்முறையாக தமிழ்நாட்டின் களஞ்சியம் இயக்கம் வாயிலாக மேற்கொண்டார். கூடவே, சமூக அடிப்படையில் குறுநிதியமைப்புக்களைத் தொடக்கினார். அமெரிக்காவின் Tao Porchon-Lynch பற்றிக் கேள்விப்பட்டு உங்களுக்கு இன்பமும் ஆச்சரியமும் ஒருசேர ஏற்படலாம். Lynch இன்று யோகக்கலையின் வாழும் நடமாடும் அமைப்பாக உருவெடுத்திருக்கிறார். நூறு ஆண்டுகள் ஆன போதிலும் கூட உலகம் முழுவதிலும் மக்களுக்கு யோகக்கலையை அவர் பயிற்றுவிக்கிறார், இதுவரை 1500 பேர்களை யோகப் பயிற்றுநர்களாக ஆக்கியிருக்கிறார். ஜார்க்கண்டின் Lady Tarzan என்ற பெயர் கொண்ட பிரசித்தமான பெண்மணியான ஜமுனா டுடூ (Tudu), மரக் கொள்ளையர்கள் மற்றும் நக்சல்களை எதிர்க்கும் சாகசம் நிறைந்த பணியைச் செய்திருக்கிறார், அவர் 50 ஹெக்டேர் காட்டை அழிப்பதைத் தடுத்ததோடு, பத்தாயிரம் பெண்களை ஒருங்கிணைத்து மரங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க உத்வேகம் அளித்தார். இந்த ஜமுனா அவர்களின் அயராத உழைப்பு காரணமாகவே இன்று கிராமவாசிகள் அனைவரும் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் 18 மரங்களையும், ஒவ்வொரு பெண்ணின் திருமணத்தின் போதும் 10 மரங்களையும் நடுகிறார்கள். குஜராத்தின் முக்தாபேன் பங்கஜ்குமார் தக்லீயின் கதை உங்கள் மனங்களில் உத்வேகத்தை நிறைத்து விடும், மாற்றுத் திறனாளியாக இருந்தும் கூட, இவர் பெண்களின் மேம்பாட்டிற்காக செய்திருக்கும் பணிகளைப் பார்க்கும் வேளையில், இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் கிடைப்பது மிகவும் கடினம் என்றே நினைக்கத் தோன்றும்.

சக்ஷு மஹிலா சேவாகுஞ்ஜ் என்ற பெயருடைய அமைப்பை நிறுவி, பார்வைத்திறன் இல்லாத குழந்தைகளை சுயசார்புடையவர்களாக ஆக்கும் பவித்திரமான பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார். பிஹாரின் முஸஃபர்புரைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமாரி தேவியின் கதை மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. பெண்களின் அதிகாரப்பங்களிப்பு மற்றும் விவசாயத்தை இலாபகரமானதாக ஆக்க இவர் ஒரு எடுத்துக்காட்டை முன்வைத்தார். விவசாயியான இந்தப் பெண்மணி தனது பகுதியைச் சேர்ந்த 300 பெண்களை ஒரு சுய உதவிக் குழுவோடு இணைத்தார், பொருளாதார ரீதியாக தற்சார்பு உடையவர்களாக ஆவதற்கு உத்வேகம் அளித்தார். அவர் கிராமத்தின் பெண்களுக்கு விவசாயத்தோடு கூடவே, பிற வேலைவாய்ப்புகளிலும் பயிற்சி அளித்தார். குறிப்பாக அவர், விவசாயத்தோடு தொழில்நுட்பத்தை இணைத்தார். மக்களே! இந்த ஆண்டு தான் பத்ம விருதுகள் பெற்றவர்களில் 12 விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது முதன்முறையாக இருக்கலாம். பொதுவாக, விவசாய உலகோடு தொடர்புடையவர்களில் குறைவானவர்களுக்குத் தான், மேலும் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் இன்னும் குறைவாகத் தான் பத்மஸ்ரீ பட்டியலில் இடம் பிடிப்பார்கள். ஆனால் இந்த முறை பட்டியலைப் பார்க்கும் போது உள்ளபடியே மாறிவரும் இந்தியாவின் உயிரோவியமாக இது காட்சியளிக்கிறது. விவசாயிகளுக்குப் புதிய இந்தியாவில் எத்தனை மகத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை இது பளிச்செனத் துலக்கிக் காட்டுகிறது.

 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் இன்று உங்கள் அனைவரிடமும் இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இதை கடந்த சில நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன். இப்போதெல்லாம் நான் நாட்டில் எங்கே சென்றாலும், ஆயுஷ்மான் பாரதம் திட்டம் அதாவது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் சில பயனாளிகளைச் சந்திப்பது என்ற முயற்சியில் ஈடுபடுகிறேன். சிலரோடு கலந்து பேசும் வாய்ப்பு கிட்டுகிறது. தனியாக இருக்கும் ஒரு தாயிடம் பணம் இல்லாத காரணத்தால் தனக்கும் தன் குழந்தைக்கும் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. இந்தத் திட்டம் காரணமாக அவளால் தனக்கும் சரி, தனது குழந்தைக்கும் சரி, வைத்தியம் பார்த்துக் கொள்ள முடிந்ததோடு, தாய் – சேய் இருவரும் நலமடைந்தார்கள். குடும்பத் தலைவன் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வரும் போது, விபத்துக்கு இரையாகி அவனால் அவனது வேலையைத் தொடர முடியாத அவலநிலை. இந்தத் திட்டம் காரணமாக அவன் பயனடைந்து மீண்டும் உடல் நலமடைந்தான், புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினான்.

சகோதர சகோதரிகளே! கடந்த ஐந்து மாதங்களாக சுமார் 12 இலட்சம் ஏழைக் குடும்பங்கள் இந்தத்திட்டத்தால் பயனடைந்திருக்கின்றன. ஏழையின் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதனால் என்னால் கண்கூடாகக் காணமுடிகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற முடியாத ஏழை மனிதன் பற்றி உங்களுக்கும் தெரிய வரலாம். அப்படி உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அவர்களுக்கு இந்தத்திட்டம் பற்றி அவசியம் விளக்கிச் சொல்லுங்கள். இந்தத்திட்டம் அப்படிப்பட்ட அனைத்து ஏழைகளுக்கும் சொந்தமானது.

என் மனதில் வீற்றிருக்கும் என் நாட்டுமக்களே! பள்ளிக்கூடங்களில் தேர்வுக்காலங்கள் தொடங்கவிருக்கின்றன. நாடு முழுவதிலும் பல்வேறு கல்வி வாரியங்கள் அடுத்த சில வாரங்களில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வு செய்ல்பாடுகளைத் தொடங்கிவிடும். தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நான் என் தரப்பிலிருந்து மனம்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில நாட்கள் முன்பாக தில்லியில் பரீக்ஷா பே சர்ச்சா, அதாவது தேர்வுகள் தொடர்பான உரையாடல் என்ற ஒரு பெரிய நிகழ்ச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. இந்த டவுன் ஹால் நிகழ்ச்சியில் முதன்முதலாக தொழில்நுட்பத்தின் வாயிலாக, நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் வாழும் கோடிக்கணக்கான மாணவர்களோடும், அவர்களின் பெற்றோரோடும், ஆசிரியர்களோடும் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தேர்வுகள் தொடர்பான உரையாடல் நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், தேர்வுகளோடு தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் குறித்து தங்கு தடையே இல்லாமல் விவாதங்கள் நடைபெறுவது தான். மாணவர்களுக்கு நிச்ச்யமாகப் பயனளிக்கும் வகையிலான பல கோணங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும், யூ ட்யூபில் இந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவைக் காணலாம்; வரவிருக்கும் தேர்வுகள் குறித்து அனைத்து தேர்வுப் போராளிகளுக்கும் என் ஏராளமான நல்வாழ்த்துக்கள்!

 

என் மனம்நிறை நாட்டுமக்களே! பாரதம் பற்றிய பேச்சு என்று வந்தால், பண்டிகைகள் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? முடியாதில்லையா? மகத்துவமே இல்லாத ஒரு நாள் அல்லது பண்டிகையே இல்லாத காலம் என்ற ஒரு நாளே நம் நாட்டில் இருக்க முடியாது என்ற வகையில் தான் நமது நாட்டிலே அனைத்து நாட்களையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கிறோம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரம், மரபுவழி நம்மிடத்தில் இருக்கிறது. சில நாட்கள் கழித்து மஹாசிவராத்திரி புனித நாள் வரவிருக்கிறது, இந்த முறை சிவராத்திரி திங்கட்கிழமையன்று வருகிறது எனும் போது ஒரு சிறப்பான மகத்துவம் நம் மனங்களிலே கொலுவீற்று மணம் பரப்புகிறது. இந்தப் புனிதமான சிவராத்திரித் திருநாளை ஒட்டி உங்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எனதருமை நாட்டுமக்களே! சில நாட்கள் முன்பாக நான் காசிக்குச் சென்றிருந்தேன். அங்கே மாற்றுத்திறன் படைத்த சகோதர சகோதரிகள் சிலருடன் சற்று நேரத்தை கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் பல விஷயங்கள் தொடர்பாகப் பேசமுடிந்தது, அவர்களின் தன்னம்பிக்கை உண்மையிலேயே தாக்கம் ஏற்படுத்துவதாக, உத்வேகம் அளிப்பதாக இருந்தது. உரையாடிக் கொண்டிருக்கும் போது கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர், தான் ஒரு மேடைக்கலைஞர் என்று கூறினார். கேளிக்கை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்பவர் என்று தன்னை அறிமுகப்படுத்திய போது, நீங்கள் யார் போலெல்லாம் பேசுவீர்கள் என்று கேட்டேன். அவர் நான் பிரதம மந்திரியைப் போல பேசி மிமிக்ரி செய்வேன் என்றார். உடனே நான், சரி கொஞ்சம் செய்து காட்டுங்களேன் என்ற போது, எனக்கு சுகமான ஒரு ஆச்சரியம் காத்திருந்தது, மனதின் குரலில் எப்படி நான் பேசுவேனோ, அதைப் போலவே அவர் பேசிக் காட்டினார், மனதின் குரலை மிமிக்ரி வாயிலாகச் செய்து காட்டினார். மனதின் குரலை மக்கள் கேட்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அதை நினைவில் கொள்ளவும் செய்கிறார்கள் என்பதை அறிந்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களின் சக்தியைக் கண்டு நான் மிகவும் அசந்து போனேன், அவர்கள் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தினார்கள்.

 

என் கனிவுநிறை நாட்டுமக்களே! மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக உங்கள் அனைவரோடும் இணைவது எனக்கு அலாதியான அனுபவத்தை அளித்து வந்திருக்கிறது. வானொலி வாயிலாக ஒரு வகையில் கோடிக்கணக்கான குடும்பங்களோடு நான் ஒவ்வொரு மாதமும் கலந்து உறவாடி வருகிறேன். பலமுறை உங்களோடு உரையாடும் போதும், நீங்கள் எழுதிய கடிதங்களைப் படிக்கும் போதும், உங்கள் தொலைபேசி அழைப்புக்களைக் கேட்கும் போதும், நீங்கள் என்னை உங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறீர்கள் என்ற எண்ணம் என் மனதில் மேலோங்குகிறது. இந்த உணர்வு என் மனதிலே சுகமான ஒரு அனுபவத்தைத் துளிர்க்கச் செய்கிறது, சுகந்தம் கமழ்கிறது!.

நண்பர்களே! தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் மிகப் பெரிய கொண்டாட்டங்கள். அடுத்த இரண்டு மாதங்கள் நாமனைவரும் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போம். நானுமே கூட இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்கிறேன். ஆரோக்கியமான ஜனநாயக பாரம்பரியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில், அடுத்த மனதின் குரல் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம் பெறும். அதாவது மார்ச்-ஏப்ரல்-மே இந்த மூன்று மாதங்களின் எனது உணர்வுகள் அனைத்தையும், தேர்தல்களுக்குப் பிறகு ஒரு புதிய நம்பிக்கையோடு, உங்கள் ஆசிகள் என்ற பலத்தோடு, மீண்டும் ஒருமுறை மனதின் குரல் வாயிலாக நமது உரையாடல் என்ற தொடரைத் தொடக்குவேன், உங்கள் மனதின் குரலோடு பல ஆண்டுகள் இணைந்து பயணிப்பேன். மீண்டும் ஒருமுறை மிகுந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...