2008 மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்த அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவிற்கு எப்.,35 ஸ்டீல்த் போர் விமானங்களை வழங்க உள்ளதாக, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: அன்பான வரவேற்பு, சிறந்த விருந்தோம்பல் அளித்த எனது நண்பர், டிரம்புக்கு எனது நன்றி. இந்திய- அமெரிக்க உறவை போற்றியுள்ள டிரம்ப், தற்போது அதனை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை பொறுத்தவரை, அதிபர் டிரம்ப் அமைதியை மீட்டெடுக்க முயற்சி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியா – அமெரிக்கா இடையே கூட்டாண்மை ஜனநாயகம் வலுவடைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைப் பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை அமெரிக்காவுடன் இணைந்து வலுப்படுத்துவோம். லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் துணைத் தூதரகங்களை திறக்க முடிவு செய்திருக்கிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா – அமெரிக்கா ஒன்றாக இணைந்திருக்கின்றன. எல்லையின் மறுபக்கத்தில் உருவாகும் பயங்கரவாதத்தை ஒழிக்க, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2008ம் ஆண்டு இந்தியாவில் இனப்படுகொலை செய்த, குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததற்காக அதிபருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்பப் பெற, இந்தியா தயாராக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், ஏமாற்றப்பட்டு, பெரிய கனவுகளுடன் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனை தடுப்பது அவசியம். இதற்காக, இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படும். டிரம்ப் இதற்க முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப் பேசியதாவது: பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இங்கும், இந்தியாவிலும் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அழகான நாட்டிற்கு நான் பயணம் செய்தேன். அது ஒரு நம்பமுடியாத காலகட்டம். இது சிறப்பு பிணைப்பை உருவாக்கியது.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய, சதித்திட்டக் குற்றவாளி, தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் பெடரல்ஸ் சிறையில் உள்ள, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ராணா, மிகவும் மோசமானவன்.
இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் முன்னணி நாடாக அமெரிக்கா இருப்பதை உறுதி செய்யும், எரிசக்தி தொடர்பான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக பாதையான, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற உள்ளோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரை சென்று பின்னர் அமெரிக்கா வரை செல்லும்,
இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கான இராணுவ தளவாடங்கள் விற்பனையை பல பில்லியன் டாலர்களால் அதிகரிக்க உள்ளோம். இந்தியாவிற்கு எப்.,35 ஸ்டீல்த் போர் விமானங்களை வழங்கவும் முடிவு செய்திருக்கிறோம்.
இந்தியா மற்ற நாடுகளை விட அதிகமாக வரி விதிக்கிறது. அதனால் தான், நாங்களும் அதிக வரி விதிக்கிறோம். ஹார்லி டேவிட்சன் பைக்குகளை, இந்தியாவில் விற்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |