எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராமபக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் ராமநாம வாழ்த்துக்கள்

இன்று நமது ராமர் மீண்டும் நம்மிடையே விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். பல நூற்றாண்டு காத்திருப்புக்குப்பிறகு நமது ராமபிரான் நமக்கு அருள்பாலிக்க வந்திருக்கிறார். பல நூற்றாண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத பொறுமை, எண்ணற்ற தியாகங்கள் மற்றும் நீண்டநெடிய தவத்திற்குப் பிறகு, நமது ராமபிரான் இங்கு காட்சியளிக்க வந்துள்ளார். இந்த நன்னாளில் உங்களுக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்கள்.

தெய்வீக உணர்வின் சாட்சியாக நான் கருவறையில் உங்கள் சார்பாக நின்றிருந்தேன். எடுத்துரைக்க எவ்வளவோ இருந்த போதிலும் வார்த்தைகள் வசப்படவில்லை. எனது சரீரம் இன்னும் துடித்தபடி உள்ளது. என்மனம் இன்னும் அந்தத் தருணத்தை விட்டுவிலக மறுக்கிறது. எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார். எங்கள் குழந்தை ராமர் இனி இந்த தெய்வீக கோவிலில் வாசம் புரிவார். உலகின் ஒவ்வொரு பகுதியிலும், நமது நாட்டிலும் உள்ள ராம பக்தர்கள் இன்று நடந்த நிகழ்வை நெஞ்சம் நிறைய அனுபவித்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,

அதில் அளப்பரிய நம்பிக்கையும் கொண்டுள்ளேன். இந்தத் தருணம் மெய்சிலிர்க்க வைப்பது. இந்தக்கணம்தான் தெய்வீகம் நிறைந்தது, இந்தச் சூழல், இந்தத்தருணம், இந்த ஆற்றல், இந்த நேரம்.. அதுதான் ஸ்ரீ ராமபிரான் நம் அனைவருக்கும் அருள் பாலித்துள்ள தருணம். ஜனவரி 22, 2024 அன்று உதித்த கதிரவன் ஆசிர்வதிக்கப்பட்ட ஒளியைக்கொண்டு வந்துள்ளது. ஜனவரி 22, 2024, வெறுமனே நாட்காட்டியில் காட்டப்படும் தேதி அல்ல. இது புதிய காலச்சக்கரத்தின் துவக்கம். ராமர் கோயில் பூமிபூஜை தொடங்கியதிலிருந்து, நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் உற்சாகமும் ஆர்வமும் தொடர்ந்து அதிகரித்து வந்தன. கட்டுமானப் பணிகளைப் பார்க்கும் போது, நாட்டுமக்கள் மனதில் ஒருபுதிய நம்பிக்கையும் எழுச்சியும் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வந்தது. பல நூற்றாண்டுகளாக நாம் காத்துவந்த பொறுமையின் விளைவாக நமது கலாச்சாரத்தின் வேரை இன்று திரும்ப பெற்றுள்ளோம், இன்று நமக்கு ஸ்ரீராம பிரானின் கோயில் வாய்க்க பெற்றுள்ளது.

 

அடிமைத்தன மனநிலையை உடைத்து எழுந்த ஒரு தேசம், கடந்த காலத்தின் ஒவ்வொரு அடியிலிருந்தும் உத்வேகம் பெற்ற ஒருதேசம், இந்த வழியில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கிறது. இனி ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், மக்கள் இந்த நாளைப்பற்றி, இந்த அற்புதமான தருணத்தை பற்றி பேசுவார்கள். அதைவிட இந்தநொடியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும், நடப்பதைக் காண்பதற்குக் கிடைத்துள்ள அரியவாய்ப்பு நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய கருணை என்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இன்றையதினம், இந்த சமயம், இந்த இடம் அனைத்தும் தெய்வீகம் நிறைந்தவை. இவை சாதாரண காலங்கள் அல்ல. காலச்சக்கரத்தில் கரையாத மை கொண்டு காலம்வரைந்த அழியாத நினைவுக் கோடுகள்.

நண்பர்களே,

ராமரின் தடம் எங்கு பதிகிறதோ, அங்கே காற்றின் புதல்வரான ஹனுமன் நிச்சயமாக வந்திருப்பார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, ராம் பக்த ஹனுமானுக்கும், அயோத்தியில் இருக்கும் ஹனுமன்கரி ஆலயத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். சீதாதேவி, லக்ஷ்மணர், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். புனித அயோத்தி நகரம் மற்றும் புனித சரயுநதி ஆகியவற்றுக்கும் நான் தலைவணங்குகிறேன். யாருடைய ஆசீர்வாதத்துடன் இந்த மகத்தான பணி நிறைவேறியது என்பதை இந்தத் தருணத்தில் நான்தெய்வீகமாக உணர்கிறேன்… இந்த நேரத்தில் அந்த தெய்வீக ஆத்மாக்கள், அந்த தெய்வீக ஆளுமைகள் நம்மைச் சுற்றி நிறைந்துள்ளன. இந்த திவ்யமான உணர்வுகள் அனைத்திற்கும் நான் நன்றியுடன் தலைவணங்குகிறேன்.

ஸ்ரீராம பிரானிடம் நான் இன்று மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறேன். இத்தனை நூற்றாண்டுகளாக இந்தப்பணியை நம்மால் நிறைவேற்றி முடிக்க முடியவில்லையே என்பதோடு நமது கடின உழைப்பு, தியாகம், தவம் ஆகியவற்றில் ஏதோ குறைஇருந்திருக்க வேண்டும் என்பதை உணர்வதாலும் இந்த மன்னிப்பை நான் அவரிடம் கோருகிறேன். இன்று அந்தக் குறை நிவர்த்தி செய்யப் பட்டுள்ளது. ராம பிரான் இன்று நம்மை மன்னிப்பார் என்று நம்புகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே,

திரேதாவுக்கு ராமர் வருகையை முன்னிட்டு துளசிதாசர் அவர்கள் “பிரபு பிலோகி ஹர்ஷே புர்பாசி” என்று எழுதியிருக்கிறார். “ஜனித் வியோக பிபதி சப் நாசி”. அதாவது, இறைவனின் வருகையைக் கண்டதும், அயோத்தி மக்களும், நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர் என்பது அதன் பொருளாகும். நீண்ட காலமாக பிரிந்திருந்ததால் ஏற்பட்டிருந்த ஆதங்கம் முடிவுக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில், அந்தப் பிரிவு 14 ஆண்டுகள் மட்டுமே, அப்போதும் கூட அது தாங்க முடியாததாக இருந்தது. இந்த சகாப்தத்தில், அயோத்தியும் நாட்டு மக்களும் பல நூறு ஆண்டுகள் ஸ்ரீராம பிரானை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவை அனுபவித்துள்ளனர். பல தலைமுறைகள் இந்தப் பிரிவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில் இந்திய அரசியல சாசனத்தின் முதல் பிரதியில் ஸ்ரீராம பிரானுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகும், ஸ்ரீ ராம பிரானின் தங்குமிடம் குறித்து பல தசாப்தங்களாக சட்டப் போர் நடந்தது. நீதிக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெறிந்த இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நீதிக்கு சாட்சியாக நிற்கும் ராமர் கோயிலும் நியாயமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இன்று, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரே நேரத்தில் கீர்த்தனைகளும் சங்கீர்த்தனங்களும் நடத்தப்படுகின்றன. இன்று கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன, தூய்மை இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று மாலை வீடு வீடாக ராம ஜோதியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்று, ஸ்ரீராம பிரானின் ஆசியுடன், தனுஷ்கோடியில் ராமர் சேது தொடங்கும் இடமான அரிச்சல் முனையில் இருந்தேன். ராமர் கடலைக் கடக்கச் சென்ற தருணம் காலச் சக்கரத்தை மாற்றிய தருணம். அந்த உணர்ச்சிகரமான தருணத்தை உணர நான் எடுத்த தாழ்மையான முயற்சியாக அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அப்போது காலச்சக்கரம் எப்படி மாறியதோ, அதேபோல் இப்போது காலச்சக்கரம் மீண்டும் மாறி மங்களகரமான திசையில் சுழலும் என்ற நம்பிக்கை எனக்குள் உதித்தது. எனது 11 நாள் உண்ணாவிரத சம்பிரதாயத்தின் போது, ராமரின் கால்கள் தடம்பதித்த இடங்களில் எல்லாம் அவரது காலடிச்சுவடுகளை தொட்டு வணங்க முயற்சித்தேன். நாசிக்கில் உள்ள பஞ்சவடி தாம், கேரளாவின் புனித திரிப்பிரயார் கோயில், ஆந்திராவில் உள்ள லெபாக்ஷி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி என இந்த புனிதப் பயணம் தொடர்ந்தது…

இந்த யாத்திரையில் கிடைத்த புண்ணியத்தின் மூலம், சாகரிலிருந்து சரயு வரை பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். சாகர் முதல் சரயு வரை, ராமரின் பெயரால் ஏற்படும் கொண்டாட்ட உணர்வு எங்கும் நிறைந்திருந்தது. இந்திய ஆன்மாவின் ஒவ்வொரு துகளிலும் ஸ்ரீராம பிரான் இணைந்து ஒளிர்கிறார். பாரத தேசத்து மக்களின் இதயத்தில் ராமர் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார். இந்தியாவில் நாம் எங்காவது ஒருவரது மனசாட்சியை உணர இயன்றால், இந்த ஒற்றுமையை நம்மால் கண்டுணர இயலும், இந்த உணர்வு அங்கிங்கெனாதபடி, அனைத்து இடங்களிலும் காணப்படும். ஒரு நாட்டை வரையறுக்க இந்த மந்திரத்தை விட சிறந்தது என்ன இருக்க முடியும்?

எனதருமை நாட்டு மக்களே!

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பல்வேறு மொழிகளில் ராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, ஆனால் குறிப்பாக கடந்த 11 நாட்களில், பல்வேறு மொழிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமாயணத்தைக் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ராமரை வரையறுக்கும் போது, முனிவர்கள் கூறியுள்ளனர் – ரமந்தே யஸ்மின் இதி ராம: அதாவது, ஒருவருக்குள் ஒருவராக யார் ஆழப் பதிந்து விடுகிறாரோ அவரே ராமர். பண்டிகைகள் முதல் பாரம்பரியங்கள் வரை உலகின் நினைவுகளிலும் ராமர் எங்கும் நிறைந்துள்ளார். ஒவ்வொரு யுகத்திலும் மக்கள் ராமருடன் இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், மக்கள் தங்கள் சொந்த வார்த்தைகளில், தங்கள் சொந்த வழிகளில் ராமரை வெளிப்படுத்தியுள்ளனர். ராமபிரான் மீதான இந்த நேசம் ஜீவநதியாக ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. பண்டைய காலங்களிலிருந்து, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் ராமரை ஜெபித்து வருகின்றனர். ராமனின் கதை எல்லையற்றது, இராமாயணமும் எல்லையற்றது. ராமரின் கொள்கைகள், ராமரின் மதிப்பீடுகள், ராமரின் போதனைகள் என எல்லாமும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில், இதற்காக உழைத்த அந்த ஆளுமைகளை நாடு நினைவு கூர்கிறது, யாருடைய பணி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த புனிதமான நாளை நாம் இன்று காண்கிறோமோ, அந்த ஆளுமைகள் காரணமாக ராம பிரானின் இந்த ஆலய நிர்மாணத்தில் தியாகம் மற்றும் தவத்தின் உச்சத்தைப் பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். எண்ணற்ற ராம பக்தர்கள், எண்ணற்ற கரசேவகர்கள், எண்ணற்ற துறவிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்.

நண்பர்களே,

இன்றைய நிகழ்ச்சி, கொண்டாட்டத்திற்கான தருணம் மட்டுமல்ல, இந்திய சமூகத்தின் முதிர்ச்சியை உணரும் தருணமும் ஆகும். எங்களைப் பொறுத்தவரை, இது வெற்றிக்கான சந்தர்ப்பம் மட்டுமல்ல, பணிவுக்கான சந்தர்ப்பமும் கூட. பல நாடுகள் தங்கள் சொந்த வரலாற்றில் சிக்கிக் கொள்கின்றன என்பதற்கு உலக வரலாறு சாட்சி. அத்தகைய நாடுகள் தங்கள் வரலாற்றின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முயன்ற போதெல்லாம், அவை வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. உண்மையில், சில நேரங்களில், இது முன்பை விட தற்போது கூடுதல் கடினமாக உள்ளது. ஆனால் நமது நாடு வரலாற்றின் இந்த முடிச்சை அவிழ்த்துள்ள திறனும் உணர்ச்சியும் நமது கடந்த காலத்தை விட நமது எதிர்காலம் மிகவும் அழகாக இருக்கப்போகிறது என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. ராமர்கோயில் கட்டப்பட்டால் தீ விபத்து ஏற்படும் என்று சிலர் கூறிய காலம் ஒன்று இருந்தது.

அப்படிப்பட்டவர்களால் இந்தியாவின் சமூக உணர்வின் புனிதத்தை அறிந்திருக்கமுடியாது. இந்தக் குழந்தை ராமர் கோயிலின் கட்டுமானம் அமைதி, பொறுமை, பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் இந்தியசமூகத்தின் ஒருங்கிணைப்பின் அடையாளமாகும். இந்தக் கட்டுமானம் எந்த நெருப்பையும் உரசி ஏற்படுத்தவில்லை, ஆனால் ஆற்றலை உருவாக்கி இருப்பதை நாம் காண்கிறோம். பிரகாசமான எதிர்காலத்தின் பாதையில் முன்னேறிச் செல்ல சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ராமர் கோயில் உத்வேகம் அளித்துள்ளது. இன்று அந்தமக்களை அழைக்கிறேன்… வாருங்கள், உங்கள் சிந்தனையை மறுபரிசீலனை செய்யுங்கள். ராமர் நெருப்பு அல்ல, அவர் ஒரு ஆற்றல். ராமர் சர்ச்சை அல்ல, ராமர்தான் அனைத்திற்கும் தீர்வு. ராமர் நம்மவர் மட்டுமல்ல, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ராமர் நிகழ்காலம் மட்டுமல்ல, அவர் நித்தியமானவர்.

நண்பர்களே,

இன்று, உலகம் முழுவதும் இந்த ராமர்கோயில் பிரதிஷ்டை நிகழ்வுடன் இணைக்கப்பட்டுள்ள விதத்தில், எங்கும் நிறைந்திருக்கும் ராமரின் தன்மை எல்லோராலும் உணரப்படுகிறது. இந்தியாவில் இருப்பது போலவே பல நாடுகளிலும் இதேமகிழ்ச்சி, இதே கொண்டாட்டம்தான். இன்று, இந்த அயோத்தி பண்டிகை, உலகளாவிய ராமாயண பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் மாறியுள்ளது. குழந்தை ராமரின் இந்த கவுரவம் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கொள்கைக்கு கிடைத்த கௌரவமாகும்.

நண்பர்களே,

இன்று, அயோத்தியில், ஸ்ரீ ராமரின் விக்ரஹ வடிவத்தின் கும்பாபிஷேகம் மட்டுமே நடக்கவில்லை. ஸ்ரீ ராமரின் வடிவத்தில் இந்திய கலாச்சாரத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இது கவுரவத்தை ஏற்படுத்துகிறது. இது மனித விழுமியங்கள் மற்றும் மிக உயர்ந்த லட்சியங்களின் பிரதிஷ்டை ஆகும். இந்த விழுமியங்கள், இந்த லட்சியங்கள் இன்று உலகம் முழுவதற்கும் தேவைப்படுகின்றன. சர்வே பவந்து சுகினா: பல நூற்றாண்டுகளாக இந்தத் கருத்துகளை நாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். இன்று, அதே கருத்து ராமர் கோவில் வடிவில் ஓர் உறுதியான வடிவத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆலயம் கடவுளின் கோவில் மட்டுமல்ல. இது இந்தியாவின் தோற்றம், இந்தியாவின் தத்துவம் மற்றும் இந்தியாவின் பாதையை உணர்த்தும் கோயில். இது ராமர் வடிவில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் கோயில். ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம். ராமர் இந்தியாவின் நீதி, ராமர் இந்தியாவின் சட்டம், ராமர் இந்தியாவின் உணர்வு, ராமர் இந்தியாவின் சிந்தனை, ராமர் இந்தியாவின் கௌரவம், ராமர் இந்தியாவின் கம்பீரம். ராமர் ஒரு நீரோட்டம், ராமர் ஒரு விளைவு. ராமருக்கான கொள்கையும் உண்டு. ராம நீதியும் உண்டு. ராமரோ நித்தியமானவர். ராமர் முடிவில்லாத தொடர்ச்சியாக நீண்டு நிலைத்திருக்கிறார். ராமர் திறன்மிக்கவர், தெளிவானவர். ராமர் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் வியாபித்திருக்கிறார். எனவே, ராமருக்குப் புகழ் உண்டாகும்போது, அவரது செல்வாக்கு பல ஆண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்கு மட்டுமே நீடிப்பதில்லை. அதன் விளைவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இருக்கும். மகரிஷி வால்மீகி இப்படித்தான் எழுதியிருக்கிறார் – ராஜ்யம் தாஸ ஸஹஸ்ராணி ப்ரப்ய வர்ஷாணி ராகவ: அதாவது, ராமர் பத்தாயிரம் ஆண்டுகள் ராஜ்யத்தில் சிறந்து விளங்கினார். அதாவது, ராமராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. த்ரேதாயுகத்தில் ராமர் வந்தபோது, ராம ராஜ்யம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஸ்தாபனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ராமர் உலகிற்கு வழிகாட்டி வந்தார்.

எனதருமை நாட்டு மக்களே,

இன்று அயோத்தி நிலம் நம் அனைவரிடமும், ஒவ்வொரு ராம பக்தரிடமும், ஒவ்வொரு இந்தியரிடமும் சில கேள்விகளைக் கேட்கிறது. ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டது. அடுத்து என்ன? நூற்றாண்டு கால காத்திருப்பு முடிந்துவிட்டது… அடுத்து என்ன? இன்றைய இந்த சந்தர்ப்பத்தில், நம்மை ஆசீர்வதிக்க வந்த, நம்மைக் கண்காணிக்கும் தெய்வீக ஆத்மாக்களைத் திருப்பி அனுப்பிவிடுவோமா? இல்லை, இல்லவே இல்லை. காலச் சக்கரம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதை இன்று நான் முழுமையான இதயசுத்தியுடன் உணர்கிறேன். காலத்தால் அழியாத பாதையின் சிற்பிகளாக நமது தலைமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தலைமுறை தேச நிர்மாணம் என்ற நமது இன்றைய பணியை நினைவில் கொள்ளும். அதனால்தான் சொல்கிறேன் – இதுதான் சரியான நேரம், மிகச்சரியான நேரம். இந்தப் புனித காலத்திலிருந்து அதாவது இன்றிலிருந்து அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைக்க வேண்டும். ஆலய கட்டுமானத்தையும் தாண்டி, இப்போது நாட்டுமக்களாகிய நாம் அனைவரும், இந்தக் கணம் முதல், ஒரு திறன்மிக்க, திறமையான, மகத்தான, தெய்வீக பாரதத்தை நிர்மாணிக்கும் கடமையை ஏற்றுக் கொள்கிறோம். ராமரின் சிந்தனைகள் ‘நமது மனதிலும் பொதுக் கருத்தாகவும்’ இருக்க வேண்டும், இது தேச நிர்மாணத்தின் ஏணி.

நண்பர்களே,

இன்றைய யுகம் நம் மனசாட்சியை விரிவுபடுத்த வேண்டும். நம் பிரக்ஞையை விரிவுபடுத்தி… கடவுளிடமிருந்து நாட்டிற்கு, ராமரிடமிருந்து தேசத்திற்கு என்ற வகையில், ஹனுமான் மீதான பக்தி, ஹனுமானுக்கான சேவை, ஹனுமானுக்கான அர்ப்பணிப்பு, இவை நாம் வெளியில் தேட வேண்டிய அவசியமில்லாத குணங்கள். ஒவ்வொரு இந்தியரிடமும் உள்ள இந்த பக்தி, சேவை மற்றும் அர்ப்பணிப்பு வெளிப்பாடுகள் ஒரு திறமையான, மகத்தான மற்றும் தெய்வீக இந்தியாவின் அடிப்படையாக மாறும். கடவுளிடமிருந்து நாட்டு உணர்வும், ராமனிடமிருந்து தேசத்தின் உணர்வும் விரிவடைவது ஏற்பட வேண்டும்! தொலைதூரக் காட்டில் ஒரு குடிசையில் வசிக்கும் என் பழங்குடித் தாய் சபரியின் நினைவில், இணையற்ற நம்பிக்கை விழித்தெழுகிறது. அன்னை சபரி நீண்ட காலமாகக் கூறுவதுண்டு – ராமர் வருவார். ஒவ்வொரு இந்தியனிடமும் பிறக்கும் இந்த நம்பிக்கை, ஆற்றல்மிக்க, மகத்தான, தெய்வீகமான பாரதத்திற்கு அடிப்படையாக அமையும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும், ராமனிடமிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைவதே இதன் பொருளாகும். நிஷாத்ராஜின் நட்பு அனைத்து பந்தங்களையும் கடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ராமர் மீது நிஷாத்ராஜுக்கு இருந்த ஈர்ப்பு, நிஷாத்ராஜ் மீது ராமருக்கு இருந்த ஈர்ப்பு அத்தனை அசலானது. அனைவரும் சமம் என்பதே அந்த கோட்பாடு.

ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் இந்த சொந்தம் மற்றும் சகோதரத்துவ உணர்வு, ஒரு திறமையான, மகத்தான, தெய்வீக இந்தியாவின் அடிப்படையாக மாறும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும், ராமனிலிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைவதே இதன் பொருளாகும்.

நண்பர்களே,

இன்று நாட்டில் விரக்திக்கு இம்மியளவு கூட இடமில்லை. நான் மிகவும் சாதாரணமானவனாக இருக்கிறேன் என்றோ, நான் மிகவும் சிறியவன் என்றோ, யாராவது நினைத்தால், அவர் அணிலின் பங்களிப்பை நினைவில் கொள்ள வேண்டும். அணிலின் நினைவு நம் தயக்கத்தை நீக்கும், ஒவ்வொரு முயற்சியும், அது சிறியதோ பெரியதோ, அதன் சொந்த பலம், அதன் சொந்த பங்களிப்பு ஆகியவையின் அடிப்படையிலானது என்பதை நமக்குக் கற்பிக்கும். ஒவ்வொருவரின் முயற்சிகளின் இந்த உணர்வு, ஆற்றல்மிக்க, மகத்தான, தெய்வீகமான பாரதத்தின் அடிப்படையாக அமையும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும், ராமரிலிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைவதே இதன் பொருளாகும்.

நண்பர்களே,

இலங்கை அரசர் ராவணன் மிகவும் அறிவாளியாகவும், அபரிமிதமான சக்தி படைத்தவராகவும் இருந்தார். ஆனால் ஜடாயுவின் விசுவாசத்தைக் கண்டால், அவர் மகாபலி ராவணனுடனேயே மோதினார். தன்னால் ராவணனை வெல்ல முடியாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தும் ராவணனுக்கு சவால் விட்டார். கடமையின் இந்த உயரம்தான் ஆற்றல்மிக்க, வலுவான, மகத்தான, தெய்வீகமான பாரதத்தின் அடிப்படையாகும். கடவுளிடமிருந்து நாட்டிற்கும், ராமரிலிருந்து தேசத்திற்கும் தேசத்தின் உணர்வு விரிவடைதல் என்பது இதுதான். நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச நிர்மாணத்திற்காக அர்ப்பணிப்போம் என்று நாம் உறுதியேற்போம். ராமரின் பணியுடன் தேசத்திற்கான பணியும் இணைந்து ஒவ்வொரு கணமும், உடலின் ஒவ்வொரு துகளும், ராமருக்காக அர்ப்பணிப்பது தேசத்திற்கு அர்ப்பணிப்பு என்ற இலக்குடன் இணைக்கப்படும்.

எனதருமை நாட்டு மக்களே,

ஸ்ரீராமரை வழிபடுவது விசேஷமாக இருக்க வேண்டும். இந்த வழிபாடு ஆத்மாவுக்கு அப்பாற்பட்டு முழுமையானதாக இருக்க வேண்டும். செருக்கின் பொருட்டன்றி சுயத்திற்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் காணிக்கை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான நமது கடின உழைப்பின் உச்சமாகவும் இருக்கும். தினசரி வீரம், ஆண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காணிக்கைகளை நாம் ராமருக்கு வழங்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு நாளும் ராமரை வழிபட வேண்டும், அப்போதுதான் இந்தியாவை புகழ்பெற்றதாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் மாற்ற முடியும்.

எனதருமை நாட்டு மக்களே,

இதுதான் இந்தியாவின் வளர்ச்சியின் ‘அமிர்த காலம்’. இன்று இந்தியா இளைஞர் சக்தியும் ஆற்றலும் நிறைந்த நாடாக உள்ளது. இதுபோன்ற நேர்மறையான சூழ்நிலைகள் உருவாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை யாரறிவார். எனவே, நாம் இப்போது தவறவிடக்கூடாது. நாம் இனி ஓய்வெடுக்க அவகாசம் இல்லை. நமது நாட்டின் இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது. ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்தின் உத்வேகம் உங்கள் முன் உள்ளது. இந்தியாவின் அந்த தலைமுறையின் பிரதிநிதி நீங்கள்தான்… அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர் நிலவின் மீது மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார், 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறார், சூரியனுக்கு அருகில் செல்கிறார், மிஷன் ஆதித்யாவை வெற்றிகரமாக்குகிறார், அதாவது வானத்தில் தேஜஸ், கடலில் விக்ராந்த்… கொடி உயர பறக்கிறது. உங்கள் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொண்டு, நீங்கள் ‘இந்தியாவின் புதிய உதயம்’ என்று உங்களை நிரூபிக்க வேண்டும். பாரம்பரியத்தின் தூய்மை மற்றும் நவீனத்தின் எல்லையற்ற பாதை ஆகிய இரண்டையும் பின்பற்றுவதன் மூலம் இந்தியா வளம் என்ற இலக்கை எட்டும்.

எனதருமை நாட்டு மக்களே,

வரவிருப்பது வெற்றிக்கான நேரம். வரவிருப்பது சாதனைக்கான நேரம். இந்த பிரம்மாண்டமான ராமர் கோவில் இந்தியாவின் எழுச்சிக்கும், இந்தியாவின் உத்வேகத்திற்கும் சாட்சியாக நிற்கும், இந்த பிரம்மாண்டமான ராமர் கோவில் ஒரு பிரம்மாண்டமான தேசமாக இந்தியா உருப்பெற்று நிற்பதற்கு சாட்சியாக இருக்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உயர்வுக்கு சாட்சியாக இருக்கும்! நோக்கத்தில் உண்மையிருந்தால், முயற்சியில் கூட்டு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தி இருந்தால், எண்ணியிருந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றதல்ல என்று இந்த ஆலயம் கற்பிக்கிறது. இது இந்தியாவின் பொற்காலம், இந்தியா முன்னேற விழைகிறது. பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு நாம் இந்த இலக்கை எட்டியுள்ளோம். இந்த சகாப்தம், இந்தக் காலகட்டத்திற்காக நாம் அனைவரும் நீண்ட நெடுங்காலமாக காத்திருந்தோம். நாங்கள் இனி ஓய்வெடுப்பது என்பது இல்லை. வளர்ச்சியின் உச்சத்தைத் தொடர்ந்து எட்டுவோம். இந்த உணர்வுடன், நான் குழந்தை ராமரின் தளிர்ப்பாதங்களில் தலைவணங்குகிறேன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அனைத்து மகான்களின் பாதங்களுக்கும் என் வணக்கம்.

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்

அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையின்போது பிரதமர்  நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...