” தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து, காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், தி.மு.க., அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா?,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2023ம் ஆண்டுக்கான, தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட எழுப்பியிருக்கின்றனர். இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு, கைரேகைப் பதிவு உள்ளிட்டவை,அவர்களுக்கான கல்விச் சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன.
இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பளித்தது. தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக், உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
முதல் இறுதிப் பட்டியலில், தேர்வு செய்யப்பட்டவர்களின், எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், துறை சார்ந்தவர்களுக்கான சிறப்பு மதிப்பெண், பிறந்த தேதி, அவர்கள் சார்ந்த சமூகப் பிரிவு உள்ளிட்டவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம், இந்தத் தேர்வு முடிவுகள் வெளிப்படையாக அமைந்திருந்தன.
ஆனால், திருத்தப்பட்ட இறுதிப் பட்டியலில், தேர்வாளர்களின் பதிவு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எதன் அடிப்படையில், இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதனால், முதல் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 41 இளைஞர்கள், முறையான விளக்கம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து, இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தது.
ஆனால், சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளாக, காவல்துறை பணிக்காகத் தங்களைத் தயார் செய்து, அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று, பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதற்குகாவல்துறை பணிகளும் விலக்கல்ல என்பதுதான், உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு, காலதாமதமாக்குவதன் மூலம் தெரிய வருகிறது. தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து, காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், தி.மு.க., அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா?
திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |