பெங்களூரில், 15வது சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ”ராணுவ துறையில், 2025ம் ஆண்டு, மாற்றத்திற்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் வாங்குவது, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துதல் என பல மாற்றங்களை காணலாம்,” என்று தெரிவித்தார்.
ராணுவ துறை அமைச்சகம் சார்பில், பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் சர்வதேச விமான கண்காட்சி மற்றும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆசியாவில் நடக்கும் மிகப்பெரிய விமான கண்காட்சி இதுவாகும்.
அந்த வகையில், 15வது சர்வதேச விமான கண்காட்சியை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
இந்த விமான கண்காட்சி மூலம், நாட்டின் தொழில் வளம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உலகிற்கு எடுத்து காண்பிக்கப்படுகிறது. இந்தியாவின் நட்பு நாடுகளுடனான உறவு மேலும் வலுப்பெறும். அனைத்து நாடுகளும் ஒன்று கூடி செயல்பட்டால் மட்டுமே உலகில் அமைதியை நிலை நாட்ட முடியும். ஒரே நிலம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்தியா பயணிக்கிறது.
நாம் எப்போதும் அமைதியை கடைப்பிடிப்பவர்கள். வளர்ந்து வரும் நாடு என்ற பெயர் மாறி, வளரும் நாடாக இந்தியா மாறி வருகிறது. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா மேம்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முக்கிய பங்காற்றுகிறது. 2025 – 26ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ராணுவ துறைக்கு, 6.81 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 1.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடும் அடங்கும். மொத்த பட்ஜெட்டில், 75 சதவீதம் நிதி, உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்பு
கடந்த முறை கண்காட்சியை ஒப்பிடுகையில், அஸ்தா, ஆகாஷ், நீர்மூழ்கி ஏவுகணை, மனிதன் இல்லா ராக்கெட் இப்படி பல புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு, ராணுவ உற்பத்தி 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
ராணுவ துறையில், 2025ம் ஆண்டு மாற்றத்திற்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் வாங்குவது, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துதல் இப்படி பல மாற்றங்களை காணலாம். விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். விமான கண்காட்சிக்கு 26 நாடுகளின் ராணுவ அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்; 90 நாடுகளின் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். 900க்கும் அதிகமான நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.
பிரயாக்ராஜில் பிரமாண்டமான முறையில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. அதுபோன்று, இந்த விமான கண்காட்சியும் கும்பமேளா என்று சொல்லும் அளவுக்கு பிரமாண்டமாக நடக்கும். மஹா கும்பமேளா, இந்தியாவின் கலாசாரத்தை விளக்கினால், ‘ஏரோ இந்தியா’ இந்தியாவின் பலத்தை காண்பிக்கும்.
அடுத்த 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாறும் வகையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ‘மேக் இன் இந்தியா, மேக் பார் வேர்ல்டு’ என்ற முறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. புதிய தொழில்களுக்கு அரசு தரப்பில் ஊக்கமளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேட், நாகலாந்து முதல்வர் நீபியூ ரியோ, முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான், ராணுவப்படை தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை துணை தளபதி தார்கர், கர்நாடக தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், ராணுவ துறை செயலர் ராஜேஷ்குமார் சிங் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விமான சாகசம்
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. விமானங்கள், விமான உதிரி பாகங்கள், ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வானத்தில் விமானங்கள் சாகசம் செய்ததை பார்த்து, பார்வையாளர்கள், கை தட்டி ஆரவாரம் செய்தனர். பெரும்பாலானோர் மொபைல் போன்களில் படம், வீடியோ எடுத்து கொண்டிருந்ததை காண முடிந்தது. இன்றும், நாளையும், வணிக ரீதியான நிகழ்வுகள் நடக்கின்றன. வரும் 13, 14ம் தேதிகளில் பொது மக்கள், அரங்குகளை பார்க்கலாம்.
கண்காட்சி நடக்கும் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில், காலையிலும், மாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், விமான நிலையத்துக்கு செல்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்கள், முண்டியடித்து கொண்டு நுழைய முற்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |