சிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய வருகை அங்கு உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்த குறுகியகாலத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு வந்து இருநாடுகளும் சந்திப்பதே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தோடு வாழும் வாழ்வுரிமையை பெற்றுத்தரும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.
சமீபகாலத்தில் மீனவர்களின் பிரச்சினைகளில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான நம்பிக்கையும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. படகுகள் எல்லாம் மீட்கப்பட்டு உள்ளன. அதற்கு தொடர்ந்து மத்திய அரசு எடுத்த முயற்சிகள்தான் காரணம்.
தமிழகத்தில் மாறுபட்ட அரசியல்சூழல் நிலவுகிறது. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை ஊழலுக்கு எதிரான தேர்தல் என்ற நிலையில் பா.ஜனதா சந்தித்தது.
மாநிலத்தில் எந்த இடைத் தேர்தல் நடந்தாலும் மாநில தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு இணக்கமாக பணி புரிந்து விடுகிறார்கள் என்பதும் மிக வேதனையான விஷயம். எது எப்படி இருந்தாலும் தேர்தலில் நின்று அந்த களத்தைப்பற்றி தெரிந்து கொண்டு எதிரிகள் எத்தனைபலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் மட்டுமல்லாமல் ஒருநல்ல தேர்தலை சந்தித்தோம் என்பதில் பா.ஜ.க மகிழ்ச்சி அடைகிறது.
போர்க் களத்தில் எதிர்த்து நிற்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு எடுத்துச்சென்றதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
முதலில் தேமுதிக.தான் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர்கள் போட்டியிட வில்லை என்றதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இன்னும் ஒற்றுமையாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களால் வர இயல வில்லை. இறுதி நாள் பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் வருவதாக இருந்தது. அந்த கூட்டத்துக்கு அனுமதிபெறுவதில் தாமதம் ஏற்பட்டது போன்ற சில காரணங்களால் அவரால் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஊழலுக்கு எதிராக ஒரேகுரலாக செயல்படத் தவறிவிட்டோம் என்பதுதான் இங்கே யதார்த்தம். எனவே வருங்காலத்தில் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்தால் ஆளும்கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் எந்த வகையிலும் பலம்பெறாமல் போய்விடுமோ? என்ற அச்சம் எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் இருக்கவேண்டும்.
இதனைத் தான் இந்தத் தேர்தலும் உணர்த்துகிறது. ஊழலுக்கு எதிராக நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்ற ஆன்ம பரிசோதனையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கூறினார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.