பிரதமர் மோடி அனைத்து மாநில பிரச்சனைகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். இதற்காக அனைத்து மாநில நிலைமைகளையும், உள்ளூர் பிரச்சனைகளையும், பொதுமக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து கொள்ள விசேஷ குழு வைத்துள்ளார்.
அவர்கள் மூலம் பிரதமர் மோடி அனைத்து பிரச்சனைகளையும் துல்லியமாக தெரிந்து வைத்துள்ளார்.
தனக்கு நேரம் கிடைக்கும் போது சம்பந்தப்பட்ட மாநில பா.ஜனதா தலைவர்களை அழைத்து கலந்துரையாடி வருகிறார்.
நேற்று திடீர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. ஓசூர் சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உடனடியாக டெல்லி சென்றார்.
மாலை 5.10 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். 5.55 வரை 45 நிமிடங்கள் பிரதமர் மோடியும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் பேசினார்கள்.
இந்த சந்திப்பு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபரிடம் கூறியதாவது:–
நாட்டின் பிரதமர், ஒரு மாநில பிரச்சனையை அறிந்து கொள்வதற்காக 45 நிமிடங்கள் ஒதுக்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பின் போது தமிழகத்தைப் பற்றி மிகவும் உன்னிப்புடன் தகவல்களை கேட்டு அறிந்தார்.
அவருடைய பேச்சு முழுக்க தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? மக்களின் எதிர்பார்ப்பு என்னென்ன இருக்கிறது என்பதாகவே இருந்தது.
குறிப்பாக சின்னச்சின்ன பிரச்சனைகள் கூட அவர் கவனத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன்.
ஆதார் அட்டை வழங்குவதில் பிரச்சனைகள் இருப்பதாக கேள்விப்பட்டு ஒருபோதும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் பற்றி மோடியிடம் ஒரு உயர்ந்த எண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கொடுத்த அன்பான வரவேற்பு, கனடாவில் தமிழர்களுடன் நடந்த சந்திப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு பல நாடுகளின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டார்.
தேசிய கட்சிகள் மாநில கட்சியை கண்டு கொள்வதில்லை என்ற உணர்வுகள் மாற்றப்பட வேண்டும். மத்திய அரசு மாநில மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என்றார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். 42 மத்திய மந்திரிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். எந்தெந்த மாவட்டத்திற்கு எந்தெந்த துறை சார்ந்த மந்திரிகள் சென்றால் அந்த மாவட்டத்தின் பிரச்சனைகளை அறிய முடியும் என்பதற்கு ஏற்ப மந்திரிகளை மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மத்திய மந்திரிகளின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும் மத்திய மந்திரிகள் மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சனைகள் பற்றியும் தேவைகள் பற்றியும் கேட்டறிவார்கள். பின்னர் அறிக்கையை பிரதமர் மோடியிடம் வழங்குவார்கள்.
மந்திரிகள் சந்திப்பு முடிந்ததும் மே இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நாங்கள் அவரை இரண்டு அல்லது மூன்று இடங்களுக்கு அழைத்துச்சென்று கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நிலைமை பற்றியும், விவசாயத்துக்கான நீர் ஆதாரம் பற்றியும் கேட்டார். அப்போது உள்நாட்டில் ஓடும் காவிரி, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி, வைப்பாறு, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைப்பதன் மூலம் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களுடன் மல்லுக்கட்டும் அரசியல் போக்கு மாறும் என்பதை அவரிடம் தெரிவித்தேன்.
இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்து வருகிறேன். விரைவில் அந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் வழங்குவேன்.
இந்த சந்திப்பின் போது நான் எழுதியுள்ள, யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழர்களுடனான சந்திப்பு தொடர்பான தகவல்களுடன் இந்தியப் பெருங்கடலில் மோடியின் அலை என்ற புத்தகத்தை பிரதமரிடம் கொடுத்தேன். அதை பிரதமர் மோடி வாங்கி 'வந்தே மாதரம்' என்று கையெழுத்திட்டு வழங்கினார்.
சமீபத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்ததாகவும், அந்த பயணம் நன்றாக அமைந்ததாக தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
தமிழகத்தில் 35 லட்சம் உறுப்பினர்களை பாரதிய ஜனதா சேர்த்து இருப்பதை பாராட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.