பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து இருப்பதாக, விமானத்தில் பறந்த பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறினார்.
பெங்களூரு எலஹங்கா விமான படை தளத்தில், நேற்று நான்காவது நாள் நடந்த விமான கண்காட்சியில், பெங்களூரு தெற்கு பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா பங்கேற்றார். இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம் ஹெச்.டி.டி. – 40ல் துணை பைலட்டாக பயணம் செய்து அசத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஹெச்.டி.டி. – 40 பயிற்சி விமானம், நமது நாட்டிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் தயாரிக்கப்பட்டதன் மூலம், வெளிநாட்டு சார்புநிலையை தவிர்த்து நமது சுயசார்பு என்ற நிலையை குறிக்கிறது. கடந்த 2012 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில், இந்தியா சுவிஸ் பிலாட்டஸ் பயிற்சி விமானங்களை வாங்கியது. ஆனால் அதன் கொள்முதலில் நிறைய முறைகேடு இருந்தது.
இதுபற்றி கடந்த 2019ல் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் பிலாட்டஸ் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவிற்கு உள்நாட்டு பயிற்சி விமானத்தின் அவசர தேவை ஏற்பட்டது.
அந்த சவாலான காலகட்டத்தில் ஹெச்.ஏ.எல்., நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு ஹெச்.டி.டி. – 40 விமானத்தை வடிவமைத்தது.
அப்போது திட்டம் மீண்டும், மீண்டும் பின்னடைவை சந்தித்தாலும், பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆதரவுடன் இந்த திட்டம் உயிர் பெற்றது.
இந்த விமானத்தில் பறந்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. சரியான கொள்கை, ஆதரவு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நமது விஞ்ஞானிகள் எடுத்து காட்டி உள்ளனர். இந்த சாதனை மறைந்த மனோகர் பாரிக்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்து உள்ளது.
ஹெச்.ஏ.எல்., தலைமை வடிவமைப்பாளர்கள் சுமா பிரகாஷ், ராமானந்த் இல்லாமல் ஹெச்.டி.டி. – 40 வெற்றி சாத்தியம் இல்லை. அவர்களுக்கும், குழுவினருக்கும் நன்றி. விண்வெளி தொழில்நுட்பத்தில் நமது நாடு உலகளாவிய தலைவராக வளர்ந்து வருகிறது. பல நாடுகள் விரைவில் ஹெச்.ஏ.எல்., தயாரிப்பு விமானங்களை வாங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |