இன்று பாஜக நிறுவன தினம் (ஏப்ரல் 6) 1980-ம் ஆண்டு இதே நாளில் தான், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில், ‘பாரதிய ஜனதா கட்சி’ தொடங்கப்பட்டது.
மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். மீது வீண்பழி சுமத்தி, ஆர்.எஸ்.எஸ்.ஸை அழித்தொழிக்க அன்றைய ஆட்சியாளர்கள் முற்பட்டனர். அந்த நெருப்பாற்றை கடந்து, உண்மையை நிரூபித்து, வெளியே வந்ததும், ஓர் அரசியல் கட்சி தேவை என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உணர்ந்தனர். அதே நேரத்தில் அரசியல் களத்தில் செயல்படுவதையும் ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை.
பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த, நாட்டின் முதல் அமைச்சரவையில், மகாத்மா காந்தி பரிந்துரையின் பேரில் அமைச்சராக இருந்தவர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி. அவரும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக இருந்த பண்டித் தீன்தயாள் உபாத்தியாயாவும் இணைந்து, 1951-ல் ‘பாரதிய ஜன சங்கத்’தை துவங்கினர். ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்த துடிப்புமிக்க இளைஞர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரையும், அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கர், ஜன சங்கத்திற்கு அனுப்பினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸின் கடும் நெருக்கடிகளையும், எதிர்ப்புகளை மீறி ஜனசங்கம் மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது. 1975 அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தை முடக்கினார். அப்போது, ஜனநாயகத்தை காக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், ஜன சங்கமும் வீறு கொண்டெழுந்து போராடியது. நெருக்கடியில் நிலை காலத்தில் நடந்த போராட்டம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், ஜன சங்கத்தையும் பெருவாரியான மக்களிடம் கொண்டுச் சேர்த்தது.
இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ‘ஜனதா கட்சி’ என்று பெயரில் ஒன்றிணைந்தன. ஜனநாயகத்தை காக்கும் போரில் ஜன சங்கமும் இணைந்தது. ஜனதா கட்சியில் கலந்தது. 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைத்தது. நாட்டில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. ஆனால், அந்த அரசு இரண்டரை ஆண்டு காலம் மட்டுமே நீடித்தது. ஜனதா கட்சி உடைந்த பிறகு ஜன சங்கத்தில் இருந்த அனைவரும், 1980 ஏப்ரல் 6-ம் தேதி, ‘பாரதிய ஜனதா கட்சி’ என்ற தனி அரசியல் கட்சியை தொடங்கினர்.
1984 பொதுத்தேர்தல் தான் பாஜக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தல். இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட அனுதாப அலையால் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு குஜராத்தில் ஓர் இடம், ஆந்திர பிரதேசத்தில் ஓரிடம் என இரண்டு எம்பிக்கள் மட்டுமே கிடைத்தனர். இரண்டு எம்பிகளுடன் தனது பயணத்தை தொடங்கிய பாஜக கடைசியாக நடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.
2014, 2019 தனி பெரும்பான்மையுடனும் 2014 ல் கூட்டணி ஆட்சியுடன் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக நாட்டை வழிநடத்தி வருகிறது. பிரதமர் மோடியின் மாபெரும் மக்கள் செல்வாக்கும், பாஜக தொண்டர்களின் கடும் உழைப்பும் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது.
1980 ஏப்ரல் 6-ம் தேதி மும்பையில் பாஜக தொடக்க விழாவில் பேசிய முதல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், ‘Nation First, Party Next, Self Last’ அதாவது ‘தேசம் முதலில், அடுத்து கட்சி, கடைசியில் தனி நபர்’ என்ற முழக்கத்தை வைத்தார்.
தேசத்திற்காகவே கட்சி. கட்சிக்காகவே தனிநபர் என்று செயல்படுகிறது பாஜக. அதனால்தான் இன்று உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் கட்சியாக பாஜக மாறியிருக்கிறது. வரும் 2026 தமிழக சட்டபேரவை தேர்தலில், பாஜக பெரும்பான்மையுடன் வென்று வரலாறு படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி வானதி சீனிவாசன்
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |