காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பற்றி பேசுகையில், நாட்டின் குடிமக்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கை வைத்தார். வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த நாட்டின் பொருட்கள் என பெயரைக் குறிப்பிடாமல் அவர் பேசினார். இதன்மூலம் அவர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் ஒரு வலுவான செய்தியை வழங்கியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உயர்த்தவும், பொருளாதாரத்தை உடனடியாக நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு கொண்டு செல்லவும், இனி எந்த வெளிநாட்டுப் பொருளையும் பயன்படுத்த மாட்டோம் என்று அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வணிகர்கள், வெளிநாட்டுப் பொருட்களிலிருந்து எவ்வளவு லாபம் ஈட்டினாலும், எந்த வெளிநாட்டுப் பொருளையும் விற்க மாட்டோம் என்று சத்தியம் செய்ய வைக்க வேண்டும் என்றார். மேலும் இன்று சிறிய கண்களைக் கொண்ட கணேஷ் ஜி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார். ஹோலி பாண்டிக்கை தேவையான வண்ணங்களும், தண்ணீர் துப்பாக்கிகளும் கூட வெளிநாட்டிலிருந்து வருகின்றன. பண்டிகை காலங்களில் இந்திய சந்தைகளில் வெளிநாட்டுப் பொருட்கள் தான் அதிக அளவில் விற்கப்படுகின்றன. ஹேர்பின்களும், பல் குத்தும் குச்சி உட்பட அந்நிய பொருட்கள் நமது வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன எனக் கூறினார்.
நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, நாட்டின் குடிமகனாக, நீங்கள் அனைவரும் ஆபரேஷன் சிந்தூருக்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கூறினார். வீடுகளுக்குச் சென்று, காலை முதல் மாலை வரை உங்கள் வீட்டில் எத்தனை வெளிநாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பட்டியலிடுங்கள். உங்களிடம் உள்ள வெளிநாட்டுப் பொருட்களைத் தூக்கி எறியுங்கள் என்று நான் உங்களிடம் சொல்லப்போவதில்லை.
ஆனால் உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் எனக் கேட்கிறேன். நமது நாட்டில் 1-2% பொருட்கள் மட்டுமே கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் மற்ற அனைத்து பொருட்களும் இன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார். இன்று நாம் நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிராண்டைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
சிந்தூர் நடவடிக்கையை இராணுவ பலத்தால் அல்ல, மக்கள் பலத்தால் வெல்ல வேண்டும் என்றும், இந்த மண்ணின் மணம் கொண்ட தாய்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்திலிருந்தும் மக்கள் சக்தி உருவாகிறது. இந்த நாட்டின் குடிமக்களின் வியர்வையின் வாசனையைக் கொண்ட பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தை ஒவ்வொரு நபரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார். இது நாட்டை வளர்ந்த நாடாக மாற்றும் கனவை நிறைவேற்றும்.
பாகிஸ்தானுடன் போர் தேவைப்பட்ட போதெல்லாம், இந்தியாவின் இராணுவ சக்தி பாகிஸ்தானை மூன்று முறையும் தோற்கடித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவை ஒரு போரில் தோற்கடிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொண்டதால், அது ஒரு மறைமுகப் போரைத் தொடங்கியது. பயங்கரவாதிகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு, அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்கள் தாக்கிக் கொண்டே இருந்தார்கள், நாங்கள் அதை சகித்துக் கொண்டோம். நாம் அமைதியை விரும்பும் நாடு என்றும், ஆனால் நமது பலம் மீண்டும் மீண்டும் சவால் செய்யப்படும்போது, இந்த நாடு மாவீரர்களின் பூமி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்கள் வெறும் 22 நிமிடங்களில் அழிக்கப்பட்டன, இந்த முறை யாரும் நம்மிடம் வந்து ஆதாரம் கேட்காதபடி அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. இப்போது நாம் ஆதாரம் வழங்க வேண்டியதில்லை, மறுபக்கத்தில் இருப்பவர் அதை வழங்குகிறார்கள்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடிகள் வைக்கப்பட்டன, அவர்களின் இராணுவம் சல்யூட் செய்தது. எனவே அவர்கள் எங்களுக்கும் பயங்கரவாதிக்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியாது. பயங்கரவாத நடவடிக்கை இனி ஒரு மறைமுகப் போர் அல்ல, மாறாக நன்கு சிந்திக்கப்பட்ட உத்தியின் கீழ் நடத்தப்படும் ஒரு போர். எனவே அதற்கேற்ப பதிலளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |