சிவசேனாவின் கோரிக்கையில் நியாயம் இல்லை

வெங்காய விலை உயர்வு, பொருளாதாரச்சரிவு, மகாராஷ்டிரா அரசியல் தோல்வி… என நாடு முழுக்க பாஜக-வுக்கு நெருக்கடிகள். ஆனாலும் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளிக்க தமிழக பா.ஜ.க-வில் தலைவரும் இல்லாத இந்தச்சூழலில், அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசனை சந்தித்தோம்.

இனி அவருடன்…

“இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந் திருக்கும் இந்த நேரத்தில், `பொருளாதாரம் என்றால் என்னவென்றே பா.ஜ.க புரிந்துகொள்ள வில்லை’ என்ற ப.சிதம்பரத்தின் விமர்சனம் உண்மைதானே?”

“பொருளாதாரத்தைப் பற்றி நன்குதெரிந்த ப.சிதம்பரம், மன்மோகன் சிங் போன்ற மேதைகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கால கட்டங்களில், இந்தியப்பொருளாதாரம் எந்தளவு சீர்குலைந்து கீழ்மட்டத்துக்குப் போயிருந்தது என்பதெல்லாம் எல்லோருக்குமே தெரியும்.

`.ஜிஎஸ்டி என்பதற்கும் இந்தப் பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று நிதியமைச்சர் பேசியிருப் பதை சுட்டிக் காட்டித்தான், இவ்வாறு ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். விமர்சனம் செய்வதற்கென்றே இருக்கிற அவர்களிடமிருந்து பாராட்டுகளை நிச்சயம் எதிர்பார்க்க முடியாது தான். அதுவும் அல்லாமல், இப்போது பாதிக்கப்பட்டு நொந்து போய் இருப்பவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?”

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைப் புகழ்வது குற்றமா, அதற்காக பி.டி.அரசகுமாரை பா.ஜ.க-விலிருந்து நீக்குவதெல்லாம் சரிதானா?”

“பி.டி.அரசகுமார் என்ன பேசினார் என்பதையெல்லாம் நான் இதுவரை முழுமையாகப் பார்க்கவில்லை. பேசத்தெரியாமல் பேசிவிட்டாரா அல்லது மு.க.ஸ்டாலினை எதிரில் பார்த்ததாலேயே புகழ்ந்தாரா அல்லது உண்மையான அர்த்தத்தோடுதான் அப்படிப்பேசினாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் பேசியது குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி, வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் நண்பர்கள் பகிர்ந்துகொண்டவைகளை மட்டும் அறிந்திருக்கிறேன்.

இவ்விஷயத்தில், பா.ஜ.க எந்த அவசர முடிவையும் எடுக்கவில்லை. உள்ளதை உள்ளபடி கடிதமாக எழுதி, `பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என பா.ஜ.க-வின் மத்திய தலைமைக்குப் பரிந்துரைதான் செய்திருந்தோம். ஆனால், அதற்குள்ளாகவே அவர் தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்து விட்டன. எனவே, `கட்சி நடவடிக்கை எடுத்ததாலேயே அவர் தி.மு.க-வுக்குப் போனாரா அல்லது தி.மு.க-வுக்குப் போகவேண்டும் என்பதற்காகவே விரும்பி இப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டாரா’ என்பதுதான் இப்போதைய கேள்வி. இதற்கு பட்டிமன்றம் நடத்தித் தான் விவாதம் பண்ண வேண்டும்.”

“வேறுபட்ட இரண்டு விஷயங்களை இணைத்துப்பேசி கேள்வி கேட்கிறீர்கள். இவை இரண்டுக்கும் நேரடி சம்பந்தம் கிடையாது.

பொருளாதார ரீதியாக ஒருசிக்கல், பிரச்னை அல்லது தேக்கநிலை இங்கே இருக்கிறது என்பது உண்மை. இது நமக்கு மட்டுமல்ல… உலக அளவில் எல்லா நாடுகளுமே இந்தப் பிரச்னையை சந்தித்து வருகின்றன. ஆனாலும் நாம்தான் ஓரளவு பிரச்னையை சமாளித்து நின்று கொண்டிருக்கிறோம். விரைவிலேயே இதுவும் சரியாகிவிடும்.

உதாரணமாக, வாரியார் சுவாமிகள் உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார். ‘வீடு இல்லை, வேலை இல்லை என்று நாட்டில் அனைவரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நீங்கள் கந்தன் கருணை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே…’ என்று கேட்கமுடியாது. யார்யார் எந்த இடத்தில் என்ன பேச வேண்டுமோ அதை பேசத்தான் செய்வார்கள். ஆனால், அவற்றையெல்லாம் முடிச்சுப் போடுவதற்கு முயற்சி செய்யக்கூடாது.”

“அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பா.ஜ.க, சபரிமலை தீர்ப்பை எதிர்ப்பது என்ன நியாயம்?”

“இதுவேறு; அதுவேறு. ராமன் இருந்த காலத்திலேயே அவரது 2-வது மகன் குசன், ராமன் பிறந்த அரண்மனை அறையை கோயிலாக மாற்றினான். ஆனால் பிற்காலத்தில், புத்தமதம் பரவிய பிறகு, அந்த ஆலயம் சிதிலமடைந்து விட்டது. அதன்பிறகு விக்கிரமாதித்யன் காலத்தில், அதேஇடத்தில் மீண்டும் பிரமாண்ட ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர், பாபர் படையெடுப்புக்குப்பிறகு, இஸ்லாமிய குரு ஒருவரது தவறான வழிகாட்டுதலினால் தான் மீண்டும் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

இப்போது, உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பைச் சொல்லியிருக்கிறது. ஆனாலும் ஒருசிலர், `நாங்கள் எதிர்க்கிறோம்’ என்று கூறி மனு கொடுத்திருக்கிறார்கள். ஒன்றும் பிரச்னையில்லை. எல்லாவற்றையும் நீதி மன்றமே முடிவு செய்யும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், அவ்வையாரம்மன் கோயில் உள்ளது. இங்கே, குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் பூஜைக்கு பெண்கள் மட்டுமேதான் கலந்து கொள்வார்கள். ஆண்கள் கலந்துகொள்ள முடியாது. இதேபோல், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலிலும் கூட பல்லாயிரக் கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, மா விளக்கு பூஜை செய்து வருகிறார்கள். அங்கே, ஆண்களுக்கு அனுமதி இல்லை. தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிற இந்த வழக்கங்களில் எல்லாம் குறுக்கிடக்கூடாது.”

“இந்த முறை எங்களுக்கு எல்லாத் தொகுதிகளிலுமே எதனால் தோல்வி ஏற்பட்டதோ, அதேகாரணம்தான் கன்னியாகுமரி தொகுதி தோல்விக்கும். ஏன் தோல்வி ஏற்பட்டது என்று தொகுதிவாரியாக நாங்கள் இன்னமும் ஆய்வு செய்யவில்லை.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை, தேர்தல் என்றாலே அங்கு மதரீதியிலான பிரசாரம்தான் நடைபெறும். தேர்தலுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையன்று அங்குள்ள சர்ச்களில், `நீங்கள் யாருக்கு ஓட்டுபோட வேண்டும்…’ என்ற கேள்வியைக் கேட்டால், எல்லோருமே பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார்கள். கிறித்துவ மதம் கட்டுப்பாடானதொரு மதம் என்பதால், அம்மதத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்களுக்கு என்ன சொல்லப் பட்டதோ அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்கவும் செய்வார்கள்.

இம்மாவட்டத்தின் மொத்த ஜனத் தொகையில் 52 சதவிகிதம் பேர் இந்துக்களாகவும் மற்றமதத்தினர் மீதமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, மதரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபிறகு, அங்கே இந்துக்களை மட்டுமே நம்பித்தான் பா.ஜ.க இருக்கவேண்டிய நிலை இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்துக்கள் ஒற்றுமையாக இல்லையே… அடுத்ததாக, எங்களுக்கு எதிராக நின்ற வேட்பாளரும் இந்துமதத்தைச் சேர்ந்தவர்தான். எனவே, அவருக்கு இந்துக்கள் ஓட்டும் மற்ற மதத்தினர் ஓட்டும் கிடைத்திருக்கிறது; வெற்றிபெற்றுவிட்டார். ஆனால், எங்களுக்கு இந்துக்கள் ஓட்டு மட்டும்தானே கிடைத்திருக்கிறது. கன்னியாகுமரியைப் பற்றி விவரம் தெரிந்த எல்லோருக்குமே இதுதான் சமாச்சாரம் என்பது தெரியும்.”

“மகாராஷ்டிரா அரசியலில் பா.ஜ.க செய்தது துரோகஅரசியல் என்ற சிவசேனாவின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதுதானே?”

“பா.ஜ.க-வும் சிவசேனாவும் சித்தாந்த ரீதியாக ஒன்று பட்ட கட்சிகள். சித்தாந்தரீதியான கூட்டணி என்று வருகிற போதும் எத்தனையோ பிரச்னைகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம்; அவர்களும் கூட சந்தித்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் வெளியில்போய் காரணமாக சொல்லிப் பேசுவது பொருத்தமல்ல.

கூட்டணியில் இருக்கிறபோதே ஒருமாதிரியாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். `சாம்னா’ பத்திரிகையில் தொடர்ந்து எங்களைத் தாக்கி எழுதிக்கொண் டேயிருப்பார்கள். ஆனாலும்கூட நாங்கள் பொறுமையாகவே இருந்தோம்… இப்போதும் இருக்கிறோம்.

`நரேந்திர மோடி தலைமையில் இருக்கிற ஒருமாநில அரசாங்கம் பொறுப்புக்கு வரவேண்டும்’ என்றுதான் மக்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு, சித்தாந்தத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு `முதல் அமைச்சராவதே முக்கியம்’ என்று நேர் எதிர்சித்தாந்தம் கொண்ட காங்கிரஸ் கட்சியோடு கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். எனவே, அடுத்து ஒரு தேர்தல் எப்போது வந்தாலும் சிவசேனா பயங்கரமாக அடிவாங்கும். ஏனெனில், மகாராஷ்டிரா மாநில மக்கள் விருப்பத்தை நிறைவேற்றாமல், தான் முதல்வராக ஆகவேண்டும் என்ற விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டுள்ளது சிவசேனா கட்சி.

எனவே, சிவசேனாவின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்பது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, மக்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கிறது. அதன் விளைவை அடுத்த தேர்தலில் நிச்சயம் எதிர்கொள்வார்கள்.”

“மாநில அளவிலும் எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் பா.ஜ.க செய்துவரும் பேர அரசியல், கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறதே…?”

“இந்தக் கட்சிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் வாக்களிக்கிறார்கள். அந்தவகையில், பெரும்பான்மை தொகுதியை வென்றிருக்கும் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்காக மற்றகட்சிகளின் துணையை நாடுவது தவறில்லை. இப்படியெல்லாம் முயற்சிசெய்து ஆட்சியைத் தக்கவைத்தால் தான், வாக்களித்த மக்கள், `நீ ஆம்பளைதான்’ என்பார்கள். இல்லையென்றால், `உனக்கு நான் ஓட்டு போட்டேன். ஆனால் நீ பின்வாங்கிவிட்டாயே…’ என்று நினைப்பார்களா இல்லையா? எனவே, மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து செயல்படவேண்டும். அடிப்படையிலேயே இந்த அரசியல் தந்திரங்கள் எல்லாம் மாறவேண்டும் என்று சொன்னால், காங்கிரஸ் கட்சி வகுத்துவைத்துள்ள இந்த விஷயங்களை எல்லாம் மாற்றுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும்!”

“இந்த அரசியல் உத்தியை யாரிடமிருந்து கற்றுக்கொண்டது பா.ஜ.க?”

“எல்லா அரசியல்வாதிகளுமே கிருஷ்ணர், சத்ரபதி சிவாஜி, சாணக்கியர் என இவர்கள் மூவரையும் பின்பற்ற வேண்டும். காரணம், இவர்கள் சொல்லிச்சென்ற நெறிமுறைகளின்படிதான் பா.ஜ.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

போர்க்களத்தில் எதிரி ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக நிற்கிறபோது கொல்லக்கூடாது என்பது விதி. ஆனால், மகாபாரத போர்க்களத்தில் கர்ணன், தேர்ச்சக்கரத்தில் சிக்கிக் கிடக்கும்போது, `இதுதான் சரியான தருணம்… கொல்’ என்கிறார் தர்மத்தைக் காக்க வந்த கிருஷ்ணர். ஆனால், `இது நியாயமா…’ என்று கேட்டுத் தயங்குகிறார் அர்ஜுனர். `நியாய தர்மம் பற்றி யார் பேசுவது… திரௌபதியை துகில் உரிந்தபோது, சுற்றியிருந்த எல்லோருமே சிரித்துக்கொண்டுதானே இருந்தார்கள். எனவே, தர்மம் நியாயத்தை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களிடம்தான் நாமும் நியாய தர்மங்களைப் பின்பற்ற வேண்டும்’ என்று கிருஷ்ணனே சொல்கிறாரே. எனவே, கிருஷ்ணன் சொல்வதைத்தான் இப்போது பா.ஜ.க சொல்கிறது.”

“மேட்டுப்பாளையத்தில், தீண்டாமைச் சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் இறந்திருக்கிறார்கள். இந்த சாதிய தீண்டாமையை பா.ஜ.க கண்டிக்கவில்லையே?”

“மேட்டுப்பாளையம் சம்பவத்தில், தீண்டாமைச் சுவர் என்பதே தவறான கருத்து. அதனால்தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினே தனது பதிவிலிருந்து `தீண்டாமைச் சுவர்’ என்ற வார்த்தையை உடனடியாக நீக்கிவிட்டார். விபத்தில் மனிதர்கள் பலியாகியிருக்கிறார்கள். எனவே, நேரில் சென்று அந்த மக்களுக்கு அனுதாபம், ஆறுதல் தெரிவிப்பதுதான் சரியான நடைமுறை.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு வருகைதந்த காந்திஜி, `இங்கே எத்தனைபேர் அரிஜனங்கள்…’ என்று ஒரு கேள்வி கேட்டார். அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் தயக்கம். ஏனெனில், ஆர்.எஸ்.எஸ் முகாமில் யார் யார் என்னென்ன சாதி என்பதே எங்களுக்கெல்லாம் தெரியாது. `சாதி சொல்லாதே; சாதி கேட்காதே’ என்பதுதான் எங்களுக்கு முதல்பாடமே! பின்னர், அங்கே சாதி வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றாக விளையாடுகிறார்கள், பயிற்சி செய்கிறார்கள், சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் புரிந்துகொண்டார். உடனே, `நான் என்ன விஷயத்துக்காக வெளியில் இருந்து பாடுபடுகிறேனோ அதே விஷயத்தை அமைதியாக அமல்படுத்திவருவது ஆர்.எஸ்.எஸ்’ என்று பாராட்டினார். இது ஓர் உதாரணம்தான்.”

“காங்கிரஸ் திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்கிறது என்று விமர்சிக்கிற பா.ஜ.க-வே அ.தி.மு.க முதுகில்தானே சவாரி செய்கிறது?”

“அ.தி.மு.க-வை நம்பி நாங்கள் இல்லை; எங்களை நம்பி அ.தி.மு.க-வும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்து கொண்டோம். அது இப்போதும் தொடர்கிறது. வரவிருக்கிற உள்ளாட்சித்தேர்தலில், கூட்டணி வைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறோம். இதில், சவாரி என்பது எங்கே வருகிறது?

`யாரோடும் கூட்டணி இல்லை’ என்ற தைரியமான முடிவை ஜெயலலிதா அன்றைக்கு எடுத்தார். ஆனால், இன்றைக்கு ஜெயலலிதா போன்று ஒருதலைமை இல்லாத காரணத்தால், `நமக்கு கூட்டணிதான் அவசியம்’ என்று அ.தி.மு.க நினைக்கிறது. அதேசமயம், எங்களுக்கு சரியான

தலைமையாக நரேந்திர மோடி இருந்தாலும்கூட தி.மு.க, அ.தி.மு.க அளவுக்கு மக்களிடம் வாக்குகளைப் பெறும் சக்தி என்பது எங்களுக்குக் குறைவுதான். அதனால், எங்களுக்கு என்ன தேவையோ அது அ.தி.மு.க-வில் இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அது எங்களிடம் இருக்கிறது. ஆகவே ஒன்றாக கூட்டணி சேருகிறோம். இதில் யார் முதுகிலும் யாரும் சவாரி செய்யவே இல்லை.”

நன்றி ஜூனியர் விகடன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...