சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனமானது, மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
கடந்த 6 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 17) ரூ. ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட பா.ஜ., தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.,வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பா.ஜ., மாநில செயலாளர்கள் வினாத் செல்வம், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடுகளின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.
தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?. இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
பேட்டி அளித்து விட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
நானும் பா.ஜ., நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்து விடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்கு செல்லும் பா.ஜ.,வினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
ரூ.40 ஆயிரம் கோடி
டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலின் முதல் குற்றவாளி. செந்தில் பாலாஜி 2வது குற்றவாளி தான். ஒரு அமைச்சருக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. போலீசாரின் மீது நம்பிக்கை இருந்ததால் தேதி அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தோம். இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். அப்போது என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.
பா.ஜ., மீதான பயத்தின் காரணமாக போராட்டம் தடுக்கப்படுகிறது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். ஊழல் செய்யவில்லை என்றால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். பயம் இருந்ததால் கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் நல்ல அரசியலை கொண்டு வர பா.ஜ., போராடுகிறது.
முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க., சந்திக்க உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். பேட்டி அளித்து விட்டு போராட்டத்துக்கு புறப்பட்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |