விவேகானந்தரை பற்றி மகாகவி பாரதியார்

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத் திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.

சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே

கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்கோ எல்லையே கிடையாது. கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானந்தரே ஆவார் என்று தோன்றுகிறது.

"அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்' என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பராசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டாள். அவர் ஜப்பானி லிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.

"பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு இலட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன் வெற்றிக்கொடியை நிலைநாட்ட வேண்டும்' என்று, இறைவனின் சங்கல்பம் இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ் நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

"விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்' என்பதை உலகம் அறியும்.

ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடை பெற்ற சர்வ சமயப் பேரவையில்,  நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொற்பொழிவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வெற்றிவீரராக இந்தியாவிற்குத் திரும்ப வருவதற்கு, போஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்.

விவேகானந்தரின் சத்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களே சமீபத்தில் தோன்றி மறைந்த மகான்கள். "இவர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர்?' என்று வகுத்துக் கூறுவ தற்கு இது சமயம் இல்லை. அதற்கு நான் தகுதி உடையவனு மில்லை. சுக்கிர கிரகத்திற்கும், புதன் கிரகத்திற்கும் உள்ள உயர்வு தாழ்வு பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள் இருக்கும் ஒரு தேரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? சுயநலம், ஆசை, அச்சம் என்ற குணங்கள் நிறைந்த உலக மாயை என்ற பாறைக்குள் இருக் கும் தேரையாகிய நான் ஞானம் என்ற ஆகாயத்தில் சர்வ சுதந்திரமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஜோதி நட்சத்திரங்களாகிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கேசவசந்திரர் முதலானவர் களின் உயர்வு தாழ்வு பற்றி எப்படி வகுத்துச் சொல்ல முடியும்?

ஆனால் அந்தப் பாறையிலிருந்தும் ஒரு சிறிய பிளவின் மூலம், ஏதாவது ஒரு நட்சத்திரத் தின் ஒளியைப் பார்த்து மகிழும் தன்மை தேரைக்கும் இருக்கலாம் அல்லவா? அதுபோல் எனக்குத் தெரிந்த வரையில், விவேகானந்தச் சுடரின் பெருமையைச் சிறிது பேசத் தொடங்குகிறேன்.

உண்மையான புருஷத்தன்மையும், வீரநெறியும் மனித வடிவம் எடுத்தது போல் அவதரித்தவர் விவேகானந்தர். அவருக்கு அவருடைய தாய் தந்தைகள், "வீரேஸ்வரன்' "நரேந்திரன்' என்ற பெயர்கள் வைத்தது, மிகவும் பொருத்தமானது அல்லவா?

"இந்த ஜகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று மில்லை' என்ற மகத்தான கொள்கையை, உலக மக்களுக்கு எடுத்துப் போதனை செய்வதற்கு வந்த இந்த மகான், "இந்த ஜகத்தில் தெய்வமே கிடையாது' என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இந்தக் கொள்கைச் சிறிது காலத்திற்குப் பிறகு அவரிடமிருந்து நீங்கிவிட்டது. தட்சிணேஸ்வரம், கல்கத்தாவுக்கு வடக்கில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த தட்சிணேஸ்வரத்திற்கு நரேந்திரன் ஒரு நாள் சென்று, மகாஞானியைத் தரிசித்தார். அந்த ஞானிதான் புகழ் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்று சொல்ல வேண்டியதில்லை.

"உலகத்திற்கெல்லாம் ஒரு புதிய ஒளி கொடுப்ப தற்குப் பிறந்த மகான் இவர்!' என்பது, அந்த ஞானியின் திருவுள்ளத்தில் தோன்றி விட்டது. அப்போது பரமஹம் சர், நரேந்திரருக்கு ஞான நெறி உணத்தினார். அதனால் பிரம்மத் தேனை நரேந்திரரை முற்றி லும் அருந்தி, பரமஹம்சர் வெறிகொள்ளும்படி. செய்துவிட்டார். அந்த மகா ஞானவெறி, நரேந்திரரை விட்டு ஒருபோதும் நீங்கவில்லை. பிரம்மக் கள்ளுண்டு, இந்த நரேந்திரப் பரதேசி பிதற்றிய வசனங்களே இனி, எந்நாளும் அழிவில் லாத தெய்வ வசனங் களாகப் பெருஞ்ஞானி களால் போற்றப்பட்டு வருகின்றன.

 ஞானோபதேசம் பெற்ற காலம் முதல், நரேந்திரர் தனது பழைய இயல்புகளெல்லாம் மாறிப் புதிய ஒரு மனிதராகிவிட்டார். தாய்க்குக் குழந்தையின் மீது இருக்கும் அன்பைக் காட்டிலும், நரேந்திரர் மீது பரமஹம்சர் அதிக அன்பு செலுத்தினார். சுமார் ஆறு வருட காலம் நரேந்திரர், தன்னுடைய குருவுடன் செலவிட்டார். இந்த ஆறு வருடங்களில்தான் உலகம் முழுவதையும் கலக்கத் தோன்றிய அற்புதப் பெரிய எண்ணங்கள் இவர் மனதில் உதித்து நிலைப் பெற்றன.

வேறு பல சாதாரண சந்நியாசிகளைப் போன்று, சுவாமி விவேகானந்தர் பெண்களைக் குறித்துத் தாழ்வான கெட்ட அபிப்பிராயங்கள் உடையவர் அல்லர். "எல்லா ஜீவாத்மாக்களும் முக்கியமாக எல்லா விதமான மனிதர்களும் தெய்வங்களைப் போலவே கருதி நடத்துவதற்கு உரியவர்' என்ற தன் கொள்கையை, சுவாமி விவேகானந்தர் மிகவும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கச் செய்தியாகும். 

சுவாமி விவேகானந்தர், நம்முடைய நாட்டிற்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு மூலாதாரமாக நம்முடைய பெண்களுக்கும் பரிபூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் சுதந்திரமாக இருப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே உத்தியோகங்கள் செய்து தேடிக்கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும், ஆண்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில். புரிவதற்கு இடம் தர வேண்டும் என்றும், பெண் களை நாம் பொதுவாகப் பராசக்தியின் அவதாரங்கள் என்று கருத வேண்டும் என்றும் கருதினார் என்று தெளிவாகத் தெரிகிறது.

சுவாமி விவேகா னந்தரின் கல்விப் பெருமை யும், அறிவுத் தெளிவும், தெய்விகமான அன்பும், அவருடைய தைரியமும் மேருமலை போன்ற மன வலிமையும், அவர் செய்தி ருக்கும் சொற்பொழிவு களிலும் நூல்களிலும் இருப்பதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே தெரிகின்றன என்று கூறுவது தவறாகாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...