மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!

செல்லாத நோட்டு செய்தியை கேட்ட உடனேயே, என் மனதில்;
1. பஞ்சாப், உ.பி., தேர்தலுக்கு பா.ஜ.,வை தயார் பண்ணிட்டாங்க
2. சொந்த வீடு கனவு நனவாவதற்கு இன்னும் ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியது இல்லை என்பவை தான், உடனடியாக தோன்றிய விஷயங்கள்.

தேர்தல் அரசியல்


தீவிரவாதத்தையும், கறுப்பு பணத்தையும் மையப்படுத்தி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக, பிரதமர் அறிவித்திருந்தாலும்; அதில் உ.பி., பஞ்சாப் தேர்தல்களும் உடனடி காரணிகள் என்பதில் ஐயம் இல்லை.

பஞ்சாப் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. உ.பி., தேர்தல் மார்ச் மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்பு பணம் இல்லாமல் கட்சிகளுக்கு தேர்தலை சந்திப்பது சிரமம் என்பது தெரிந்த விஷயம் தான். பா.ஜ.,வும் கட்சி தானே அதற்கு என்ன ஆதாயம்?

மத்தியில், 10 ஆண்டுகள் ஆட்சி செய்து, 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், போன்ற பல பத்திரிகை பரபரப்புகளை அரங்கேற்றிய காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளிடம் நல்ல பண பலம் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் கூட, கல்லா கட்டும் பாதையில் பயணிப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இவை இரண்டும் தான், பஞ்சாபில், பா.ஜ., – அகாலி தளம் ஆட்சிக்கு சவால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட பஞ்சாப் கருத்து கணிப்புகள், காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சி தான் வெற்றி பெறும் என, தெரிவிக்கின்றன. இனி நிலை மாறுமா என்பதை பார்க்க வேண்டும்.

பஞ்சாபில் நிலை அப்படி இருக்க, உ.பி.,யில், 2014 லோக்சபா தேர்தலின் போது, மொத்தமுள்ள, 80 இடங்களில், பா.ஜ., 71 இடங்களை பிடித்து அசத்தியது. அது, மோடி அலை உச்சத்தில் இருந்த காலகட்டம். அதையும் தவிர, சட்டசபை தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பண பலத்தையும், அடியாள் பலத்தையும் சந்திக்க வேண்டுமானால் பெரும் பொருட்செலவாகும் நிலை தான் உள்ளது.

அதற்கு பதில், அவர்களின் பண பலத்தை குறைத்துவிட்டால், பா.ஜ.,வுக்கு, தேர்தலை சந்திப்பது சற்று எளிமையாகும் என்பது நிதர்சனம். வெறும் அரசியல் தானா?அப்போது இதெல்லாம் வெறும் அரசியல்தானா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது செயல்படுத்தப்
பட்ட நேரம் அரசியலுக்கு சாதகமான நேரமே ஒழிய,இதற்கான திட்டங்களும்,தயாரிப்புகளும், மோடி ஆட்சிக்கு வந்த அன்றில் இருந்தே நடந்து வருகின்றன.

* கடந்த, 2014ல், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், கறுப்பு பணத்திற்கான சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை மோடி உருவாக்கினார்
* அதே ஆண்டில், 'ஜன் தன் யோஜனா'வை துவங்கி, வங்கிகள் மூலம் பண பரிவர்த்த னையை அதிகரிக்க முயற்சி எடுத்தார். அதனால், இன்று, 22கோடி புதிய வங்கி கணக்கு கள் துவங்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள,31 கோடி வங்கி கணக்குகளில், இந்த திட்டத்தில் துவங்கப்பட்டவை தான் பெரும்பான்மை
* மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடு களோடு, வரி ஏய்ப்பை தடுக்க வங்கி பரிவர்த்த னைகள் குறித்து தகவல் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது
* கடந்த, 2015ல், வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை பற்றி தன்னார்வமாக, தண்டனை பயமின்றி தெரிவித்து, தகுந்த வரி கட்டி, அதை சட்டப்பூர்வமான பணமாக மாற்றிக்கொள்ள ஒரு சட்டம் இயற்றப்பட்டது
* அதே போன்று, இந்த ஆண்டு, உள்நாட்டில் உள்ள கறுப்பு பணத்திற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த தன்னார்வ முயற்சிகளால், வெறும்,33 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான், வரி வசூலிக்க முடிந்தது. அதிலும், தன்னார்வமாக முன்வந்தவர்கள், தங்களின் முழு கறுப்பு பண விபரத்தையும் கொடுக்கவில்லை என்று, தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகள் உறுதிப்படுத்தின.
* பினாமி சொத்துக்களுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் கிடுக்கிப்பிடி போடுவதற்கு ஒரு கடுமையான சட்டம், இந்த ஆண்டு, கொண்டுவரப்பட்டது
* சமீபத்தில் நிறைவேறிய, ஜி.எஸ்.டி., மசோதாவிலும் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த பல அம்சங்கள் உள்ளன
* வங்கி கணக்கோடு, ஆதார் எண் இணைப்பு, நேரடி மானியம் உள்ளிட்டவையும் இதற்கான திட்டங்களே. ஆகையால், மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும், கறுப்பு பணத்தை ஒழிப்பதை நோக்கித்தான் உள்ளது.
 

இதனால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா?


'புதிய நோட்டுகள் தான் வருகின்றனவே, ஒரு முறை இந்த நடவடிக்கையை எடுப்பதால் கறுப்பு பணம் ஒழிந்துவிடுமா, இருக்கவோ இருக்கு தங்கம்' என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை வாளியில், நீர் பிடித்து, சோப்பு போட்டு ஆகிவிட்டது; இது முதல் சலவை

தான். முதல் சலவையில் அழுக்கு போகவில்லை என்றால், இரண்டாவது சலவையும் நடக்கும். நேற்று காலை வரை, டுவிட்டரில் 'பிளாக் மணி' என்ற தலைப்பில் இந்த விஷயம் பேசப்பட்டது; ஆனால், மாலைக்குள் அதுவே, 'டீமானிடைசேஷன்' என்ற தலைப்புக்கு மாறிவிட்டது.

இங்கு, 'டீமானிடைசேஷன்' என்றால், ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை நடக்கும் சூழல். அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் நடக்க வேண்டும், மின்னணு வடிவில் பணம் மாற வேண்டும்; அது தான் மோடி அரசினுடைய குறிக்கோள். அப்படி நடக்கும் போது, இயல்பாகவே கறுப்பு பணத்திற்கு இடமில்லாமல் போகும்.

கறுப்பு பணத்திற்கு முக்கிய காரணிகளான ஊழலும், லஞ்சமும் குறையும். அந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது,

* புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் என்று கூறி உள்ளனர்; எவ்வளவு வரும் என்று கூறவில்லை. நேற்று முன்தினம் வரை, இந்தியாவில் உள்ள மொத்த ரொக்கத்தில், 84 சதவீதம், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 மற்றும் 2,000ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் அச்சடிக் கப்படலாம். இன்று நீங்கள் வங்கிக்கு சென்று ரொக்கம் கேட்கும் போது, அனைத்தும்,50 அல்லது100 ரூபாய் நோட்டுகளாக உங்களுக்கு கொடுக்கப்படலாம்


* நேற்று முன்தினம் இரவு வரை தங்கம் வாங்க முடிந்திருக்கும். அதுவும் கடையில் இருப்பு உள்ளவரை மட்டும் தான். இனி என்ன செய்வது? ஒரு சில வியாபாரிகள், 'பின் தேதியிட்டு பில் போட்டுக் கொள்கிறோம்' என்று துணிச்சலாக முன்வரலாம். அவ்வளவே.

ரொக்கத்திற்கு கட்டுப்பாடு விதித்ததற்கு அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என்று சட்டம் வரும் காலம், வெகு துாரத்தில் இல்லை

* தங்கத்தை விட்டால் மிஞ்சி இருப்பது நிலமும், வெளிநாடும் தான். நிலத்தை வாங்க, கண்டிப்பாக கறுப்பு பணம் தேவை என்ற சூழல் உள்ளது. ரொக்கம் கட்டுப்படும் போது, நிலத்தை வாங்குவது அசாத்தியமான காரியமாக மாறும்.

* நிலத்தை தங்கள் பேரில் வாங்கினால், வருமான வரி கேள்விகளும் வரும். பினாமி பேரில் வாங்கினால், இனி அதை மீட்க முடியாது, நஷ்டஈடு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் என்று, புதிய பினாமி சட்டம் சொல்கிறது

* வெளிநாட்டுக்கு பெரும் பணக்காரர்களை தவிர, மீதமுள்ளோரால் பணத்தை கடத்த முடியாது; அதுவும், ரொக்கம் குறையும் போது, ஹவாலா பரிவர்த்தனைகள் மிக மிக கடினமாகிவிடும். அதனால், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த, இது சரியான நடவடிக்கை தான் என்றே தோன்றுகிறது.
 

தொழில் பாதிக்கப்படுமா?


நம் நாட்டில், 80 சதவீத பண பரிவர்த்தனைகள் ரொக்கம் மூலம் தான் நடக்கின்றன. சிறு வியாபாரி கள், சிறு தொழில் முனைவோர், விவசாயிகள் என, பலர் ரொக்கத்தை நம்பி தான் இருக்கின்றனர்; இவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்படுவர் என்ற, வாதம் முன்வைக்கப்படுகிறது.

கண்டிப்பாக குறுகிய கால பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், இப்போது, ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிடமும் வங்கி கணக்கு உள்ளது. மின்னணு முறையில் பண பரிவர்த்தனை செய்ய, ஆயிரம் வழிகள் வந்துவிட்டன.

அதனால், வேண்டாவெறுப்பாக மாறினாலும், வங்கி மூலம் பண பரிவர்த்தனைக்கு அனைவரும் மாறி தான் ஆக வேண்டும். இப்போது நடக்காவிட்டால் எப்போது நடக்கும்? சந்தையில் பரிவர்த்தனை களும், நுகர்வும் குறையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், உயர்ந்த விலையுள்ள பொருட்களின் நுகர்வு தான் குறையும்.
 

சாதாரண பொருட்களின் விலை குறையும்; எப்படி?


உதாரணத்திற்கு, இதுவரை வரியை பற்றி சிந்திக்காத ஒரு பெரிய வெங்காய வியாபாரியை எடுத்துக்கொள்வோம். அவரிடம், சரக்கை, மூன்று மாதம் இருப்பு வைப்பதற்கு இப்போது கறுப்பு பணம் உள்ளது என்றால், இதற்கு பின் அது இருக்காது. வாங்கிய பொருளை உடனடியாகவோ, மூன்று மாதங்களுக்கு முன்போ விற்றாக வேண்டும். விலை விண்ணை தொடும் வரை காத்திருக்க இயலாமல் போகும். அதனால், காய்கறி விலை குறையும்.

இப்படி, விலை குறையும் போது, பண வீக்கமும் குறையும், நுகர்வும் அதிகரிக்கும். அதன் மூலம் தொழில் மீண்டும் வளம் பெறும். அது மட்டும் அல்லாமல், மக்கள் வங்கியில் கொண்டு ரொக்கத்தை செலுத்தும் போது, அவர்களுக்கு கிடைக்கப் போவது, குறைந்த அளவு ரொக்கம் தான். மீதமுள்ள பணம், அவர்கள் கணக்கில் செலுத்தப் படும். அதை எளிதில் ரொக்கமாக எடுக்க முடியாத படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வங்கி யில் பணம் இருப்பு அதிகரித்தால், வட்டி விகிதம் இயல்பாகவேகுறைந்துவிடும்.

இதன் மூலம், நுகர்வு கடன் அதிகரித்து, நுகர் வும் அதிகரிக்கும். அதுவும் தொழில் களுக்கு சாதகமாக இருக்கும்.ஆனால்,கல்வி தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் பாதிக்கப்படும்.
 

ரியல் எஸ்டேட்


ரியல் எஸ்டேட் தொழில், அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தில் தான் பெரும்பாலும் இயங்கு கிறது என்பது நாடறிந்தது. கறுப்பு பண முதலீடு என்பதால், கிட்டத்தட்ட இலவசமாக வந்த பணம் போல தான்; வங்கிக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. அதனால் தான் லட்சக் கணக்கான வீடுகள் விற்காமல் இருப்பினும், விலை, பெரும் வீழ்ச்சி காணாமல் இருக்கிறது.

கறுப்பு பணத்தில் மோடி கைவைத்து உள்ளதால், இந்த நிலை கண்டிப்பாக மாறும். இழப்புகளை குறைக்க வீட்டு விலைகளும் குறையும்; வாடகையும் குறையும். ஆக்கிர மித்தல், வளைத்துப் போடுதல் ஆகிய கவுன்சி லர் தொழில்கள் அவ்வளவு பிரகாசமாக தெரியாது. இதனால்,காஞ்சிபுரம் மாவட்டம் போன்ற தொழில் பகுதிகளில் சட்டம் – ஒழுங்கும் சீரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சொந்த வீடு, எட்டா கனியாக இருந்த அனைவருக்கும், இது மோடி கொடுத்துள்ள வரப்பிரசாதம்.மாற்றங்கள் என்ன?
* அடுத்த சலவைக்கு காத்திருக்காமல் இப்போதே சுதாரிப்பவர்கள், வரி கட்ட துவங்குவர். இதனால், கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்; இது போதுமான அளவிற்கு அதிகரித்தால், நாட்டில் வரி கட்டும், 2-3 சதவீதம் பேரின் மீதான சுமை குறைந்து, வரி விகிதங்கள் குறையும்
* அனைவரும் மின்னணு பண பரிமாற்றத்திற்கு மாறிவிட்டால், வருமான வரியே இல்லாத நாடாக கூட, நம் நாடு மாறலாம். பரிவர்த்தனைகள் மீது மட்டும் வரி விதிக்கும் திட்டத்தை முன்வைத்து, ஒரு குழுவினர், அரசிடம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்
* வரி கட்டுவோரின் எண்ணிக்கையும், வரி வருமானமும் அதிகரிக்கும் போது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசால் கூடுதல் நிதி ஒதுக்க முடியும். இதன் மூலம் தனிநபர் வருமானம்
அதிகரிக்கும்
* படிப்படியாக, 'டீமானிடைசேஷன்' திட்டம் அமலுக்கு வரும் போது, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சிரமமான செயல்களாக மாறும். யோசித்துப் பாருங்கள், போலீஸ்காரன் கிரெடிட் கார்டில் லஞ்சம் வாங்க முடியுமா?
* லஞ்ச பணத்தை வைத்திருப்போருக்கு இது ஏற்கனவே பெரிய சாட்டை அடி. ஏனெனில், மற்றவர்களை போல் அபராதம் கட்டிவிட்டு, தங்கள் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக அரசு ஊழியர்களால் மாற்றிகொள்ள முடியாது.

அவர்கள், சாதாரண மக்களை கசக்கி பிழிந்து சம்பாதித்த பணம் .அத்தனையும் இப்போது, ஆட்டுத்தீவனம் அல்லது ஆண்டவன் சொத்து
* தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, 'தன்னார்வ தொண்டர்கள்' கூட்டங்களை சேர்ப்பது எல்லாம் சிரமமாகிவிடும்
* சாதாரண ஊழல்கள், லஞ்சம் மூலம் அரசியலில் சம்பாதிப்பது சிரமம் என்று தெரிந் தால், கிராம அளவிலும், நகராட்சி அளவிலும் செயல்படும் பல தொழில் முறை அரசியல் வாதிகளுக்கு, அரசியல் தொழில் கசந்துவிடும். இதனால், சற்று மக்கள் தொண்டு மனப் பான்மை கொண்டவர்கள் உள்ளே வர வாய்ப்பு ஏற்படும்
* பணம் வாங்காமல் ஓட்டு போடுவோருக்கும், வரி கட்டுவோருக்கும் நாட்டு பிரச்னைகள் சற்று அதிகமாக உறைக்கத்தான் செய்யும். அதனால், ஜனநாயகம் வலுப் பெறுமா என்பதை, வரும் உள்ளாட்சி தேர்தலில் பார்ப்போம்.
 

அசாத்திய சாதனை


மொத்தத்தில், மோடியின் இந்த செயல் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வித்திட்டு உள்ளது. இது உண்மையிலேயே, வரலாற்று சிறப்புமிக்க செயல் தான். அதுவும் மிக மிக துணிச்சலான செயல். ஏனெனில், எப்பேற்பட்ட நேர்மையானவராக, மோடி இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் தான்.

அந்த கட்சி எப்பேற்பட்ட தேசபக்தி நிறைந்த கட்சி என்று யார் சொன்னாலும், அதில் உறுப்பினர்
களாக உள்ள, 11 கோடி பேரும் நேர்மையானவர்கள்; லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அப்பாற்
பட்டவர்கள் என்று யாராலும் உத்தரவாதம் தர முடியாது.சக கட்சியினரை மீறி, கறுப்பு பணத்தை ஒழிக்க துணிந்துள்ளார். அதே போல், அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். கறுப்பு
பணத்திற்கும் பெயர் போன மாநிலம் அது. இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பண பலமிக்கவர்கள் தான்.

இதனால், அங்கே, சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும் அடி கூட விழலாம். இருப்பினும், மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றால், அது அவரது நேர்பட்ட சிந்தனைக்கு அத்தாட்சி.உண்மையிலேயே அவருடைய துணிச்சலை பார்த்து தலை வணங்கத்தான் தோன்றுகிறது. அவரது இந்த முயற்சி வெற்றி அடைய, நம்மால் ஆனதை செய்வோம்.
 

அடுத்தது தங்கம்


அடுத்தபடியாக அசல் தங்கத்திற்கும் கட்டுப்பாடு வரும் போல் தெரிகிறது. அதற்கு முன்னேற்பாடாக தான், தங்க கடன் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. '100 சவரனுக்கு மேல் வைத்திருப்பவர்கள், அதற்கான சொத்து ஆதாரங்களை காட்ட வேண்டும்' என, சட்டம் வரலாம்.

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு –
துணை ஆசிரியர், தினமலர்

நன்றி தினமலர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...