தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார். அப்போது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன்சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய 65 பக்க மனுவையும் கொடுத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு நாள் பயணமாக செவ்வாய்க் கிழமை டெல்லி வந்திருந்தார். சாணக்ய புரியில் உள்ள புதிய தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், பிற்பகல் 1 மணியளவில் ராஷ்டிரபதி பவனுக்குச்சென்று, குடியரசுத் தலைவரை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர், தமிழக அரசு இல்லத்துக்கு திரும்பிய அவர், பிற்பகல் 3.30 மணியளவில் தெற்கு பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத் துக்குச்சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துதெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, அரைமணி நேரம் அவருடன் உரையாடினார். அப்போது தமிழக நலன்சார்ந்த, 65 பக்க கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தார். பின்னர் அங்கிருந்து தமிழக அரசு இல்லத்துக்கு திரும்பினார்.
முதல்வர் ஜெயலலிதா அளித் துள்ள மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 5.2.2007-ல் வெளிவந்தது. தீர்ப்பு, 19.2.2013-ல் மத்திய அரசி நாளிதழில் வெளியிடப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக் கால கண் காணிப்பு குழுவால் பயனில்லை. எனவே, காவிரி நிர்வாக குழுவையும், காவிரி நீர் வரையறை குழுவையும் விரைந்து அமைக்கவேண்டும்.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த 7.5.2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு உடனே உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர்திறந்துவிட கேரளாவுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். நதிகளை இணைக்க சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மாநிலங்கள் இடையேயான அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும். அவினாசி அத்திக் கடவு, பெண்ணையாறு பாலாறு நெடுங்கல் அணைக்கட்டு, காவிரி குண்டாறு இணைப்புகளை செயல்படுத்த வேண்டும். காவிரிப்படுகை நவீனமயமாக்கும் ரூ.11,421 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இலங்கை இனப் படுகொலை குறித்து ஐ நா., சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும். தனித்தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா உதவ வேண்டும்.பாக் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.
ராமேசுவரம் அருகே 285 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத் தீவு தமிழகத்தில் ராம நாதபுரம் மாவட் டத்தின் கீழ் இருந்தது. கச்சத் தீவு முதலில் ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்கான ஆவணங்களும் உள்ளன. கச்சத் தீவை சுற்றிலும் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இருந்தது. கடந்த 74, 76-ம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி, கச்சத் தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டு, தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனது.
கடந்த 91-ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் கச்சத் தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளாமல் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறியசெயல். இந்த ஒப்பந்தம் செல்லாது. இந்த ஒப்பந்தத்தைக் காட்டி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, அந்த ஒப்பந்தங்களை ரத்துசெய்து கச்சத்தீவை மீட்கவேண்டும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ஒதுக்கீடு செய்யப்படாத 15 சதவீத மின்சாரத்தை முழுமையாக தமிழகத்துக்கு ஒதுக்கவேண்டும். சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்தில் உள்ள புகலூருக்கான 6 ஆயிரம் மெகாவாட் மின்தொகுப்பு இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ரூ.2,250 கோடி ‘பசுமை மின்தடம்’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பாசனம், சர்வசிக் ஷா அபியான், கல்வி உரிமை சட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மத்திய அரசு தரவேண்டிய ரூ.1,576 கோடியை உடனே ஒதுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு திட்டத்தில் அனைவரையும் சேர்க்க வேண்டும். அல்லது நகர்ப் புறங்களில் 75 சதவீத மக்களை இத்திட்டத்தில் உள்ளடக்கி செயல்படுத்த வேண்டும்.
மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மாதத்துக்கு 65,140 லிட்டராக உயர்த்த வேண்டும். அரசுப் போக்குவரத்துக்கு வாங்கப்படும் டீசலுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் விலை அடிக்கடி உயராமல் நிலைப்படுத்த வேண்டும்.
போலீஸ்துறை நவீனமயத் துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அளித்து உரியநிதியை ஒதுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலை வலியுறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.