இந்திய தேசியப் புரட்சியின் தலைவர்!

 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போருக்குத் தலைமை தாங்கிய மன்னர் பகதூர் ஷாவின் நினைவு நாள் விழா இரங்கூனில் நடந்தது. 1944 ஜூலை 11ஆம் தேதியன்று நடந்த அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேதாஜி ஆற்றிய சொற்பொழிவின் சாரம் வருமாறு;

நண்பர்களே!
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மன்னாதி மன்னர் பகதூர் ஷாவின் தினத்தைக் கொண்டாடினோம். 1857ஆம் ஆண்டில் நடந்த முதலாவது இந்திய விடுதைப் போரில் நமது தலைவராக விளங்கியவர் பகதூர்ஷா. சென்ற ஆண்டில் அவரது நினைவு தினத்தில் இங்கு வந்து கலந்து கொண்டதானது, ஆசாத் ஹிந்த் இராணுவத்துக்கும், இந்திய சுதந்திரப் போருக்கும் சரித்திரச் சம்பந்தத்தை உண்டாக்கிவிட்டது. சரித்திரச் சம்பந்தம் உடையதென்று ஏன் கூறுகிறேன் என்றால், 1857ஆம் ஆண்டுக்குப் பின்னர் அன்றுதான் முதல் முறையாக இந்தியாவின் புரட்சி இராணுவம், தன்னுடைய ஆதிப்புரட்சி இராணுவத் தளபதியின் ஆன்மாவுக்கு மனம் குவிந்து மரியாதை செலுத்தி வழங்கி நின்றது.

அன்றைய தினம், சக்கரவர்த்தி பகதூர் ஷா விட்டுச் சென்ற முற்றுப் பெறாத புரட்சிப் பணியைத் தொடர்ந்து செய்து நம் தாய்த்திரு நாட்டை பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுவிப்போம் என்றும் நாம் அனைவரும் சபதம் எடுத்துக் கொண்டோம். இப்பொழுது அந்தச் சபதத்தை நிறைவேற்றும் தருணத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்பதைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அன்று இங்கு வந்திருந்தோரில் பெரும்பாலோர், இன்று இந்திய எல்லையைத் தாண்டிச் சென்று தாயகத்தில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

முதலாவது சுதந்திப் போரை நடத்திய தளபதியின் மரண பூமி, கடைசி சுதந்திரப் போரை நடத்துவதற்கு அஷ்திவாரமாகியிருக்கிறது. இதுவும் இறைவனின் கருணைதான். இந்தப் புண்ணிய பூமியிலிருந்து நமது படைகள் தாய்நாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆதலால்தான், சென்ற ஆண்டுச் சபதம் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதை உணரும் சுதந்திர இந்திய இராணுவம், அந்த மாபெரும் தேசபக்தரான ஒப்பற்ற தலைவரின் ஆன்மாவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து மரியாதை செய்யவும், வெறுக்கத் தகுந்த பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய புண்ணிய பூமியை விடுவிப்பது வரை ஆற்றலைத் தரும்படி வேண்டவுமே, மீண்டும் இங்கு கூடியிருக்கிறது.

1857ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்வது பொருத்தமென்றே நினைக்கிறேன். பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், அந்தப் போரை சிப்பாய்க்கலகம் என்று திரித்துக் கூறிவிட்டனர். உண்மை என்ன வென்றால், இந்தியச் சிப்பாய்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து நடத்திய ஒரு தேசியப் புரட்சியே ஆகும் – அது. இந்தியச் சிற்றரசர்கள் பலர் அந்தப் புரட்சிப் போரில் பங்கு கொண்டிருந்தனர். சில சிற்றரசர்கள் அதில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்றது துரதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். அந்த முதல் சுதந்திரப் போரில் நமக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. இறுதியில் எதிரிகளின் பலம் அதிகமாக இருந்ததால் அந்தப் போரில் தோல்வியுற்றோம். புரட்சி வரலாற்றில் இந்தத் தோல்வி நடக்கக் கூடாதன்று. முதல் போரிலேயே வெற்றியடைந்துள்ள தேசம் ஏதேனும் உண்டா என்பதை உலக சரித்திரத்தில் காண்பது மிகவும் அபூர்வமானதாகும்.

சுதந்திரப் போர் என்பது ஒரு முறை தொடங்கிவிட்டால், அது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். புரட்சி தோல்வியடையலாம்; நசுக்கப்படலாம். ஆனால், அந்த நிலை தற்காலிகமானதுதான். அதன் பலாபலன்களை எவராலும் அளிக்க முடியாது. அது கற்றுக்கொடுத்த பாடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. அதிக பலம் கொண்ட மற்றொரு புதிய போருக்கும் வழி திறந்து விடுகின்றன. 1857ஆம் ஆண்டில் நேர்ந்த தோல்வி பற்றிய பாடங்களைக் கற்றுவிட்டோம். அந்த அனுபவம் காரணமாக, இந்த யுத்தத்திற்கு நம்மைத் தயாராக்கிக் கொண்டோம். இதுதான் இந்திய விடுதலைக்காக நடத்தப்படும் இறுதிப் போர்.

1857ஆம் ஆண்டில் ஒரு நாள் விடியற்காலையில், இந்தியர்கள் திடீரென்று ஆயுதமேந்தி பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டனர் என்று நினைப்பது தவறு. எந்தப் புரட்சிப் போரும் அவ்வளவு அவசரமாகவோ, ஒழங்கீனமாகவோ நடைபெறுவதில்லை. நம் தலைவர்கள், அவர்களால் இயன்ற யுத்தத் தேவைகளைத் தயாரித்துக் கொண்டுதான் போரில் குதித்தார்கள். ஆனால், இறுதிவரை போராடத் தேவையான அளவுக்கு போர்ச் சாதனங்கள் இல்லாமல் போய்விட்டது. அந்தப் புனிதப் போரில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவராகிய நானா சாகிப். அந்தக் காலத்திலேயே ஐரோப்பா முழுவதிலும் சுற்றுப் பயணம் செய்து, வெளிநாட்டு உதவியையும், துணையையும் பெறத் தன்னாலியன்ற மட்டும் முயற்சி செய்தார். துரதிஷ்டவசமாக அவருடைய முயற்சி தோல்வியடைந்தது. அந்தப் புரட்சி நடந்த காலத்தில், உலக நாடுகளுடன் பிரிட்டன் நட்புக் கொண்டிருந்ததால், இதர நாடுகள் பிரிட்டனுக்கு எதிராக நானா சாகிப்புக்கு உதவ மறுத்துவிட்டன. பிரிட்டானியர்களோ இந்திய மக்களை நசுக்குவதற்குத் தேவையான பலத்தையும் சாதனங்களையும் சேகரித்து வைத்திருந்தனர்.

சில காலம் பொதுமக்களிடையிலும், இந்தியச் சிப்பாய்களிடையிலும், தகுந்த முறையில் பிரச்சாரம் நடைபெற்றிருந்தது. அதற்கேற்ப, குறிப்புக் காட்டியதும், தேசத்தின் பல பாகங்களிலும் ஏக காலத்தில் அந்தப் புரட்சி ஆரம்பமாயிற்று. வெற்றி மேல் வெற்றியடைந்தனர் புரட்சி வீரர்கள். வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களெல்லாம் பிரிட்டானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டன. புரட்சி இராணுவம் வெற்றிப் பவனி வந்தது. இப்படியாக எல்லா இடங்களிலும் புரட்சியின் முதல் கட்டம் சிறப்பாக முடிந்தது. இரண்டாவது கட்டத்தில் எதிரியின் எதிர் நடவடிக்கை ஆரம்பமாயிற்று. நமது புரட்சி வீரர்களால் அதை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆகவே, விரிவான போர் முனைகளும், வழி நடத்திச் செல்ல திறமை மிகுந்த புரட்சித் தளபதியும் தேவைப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் சில பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள் புரட்சியில் அக்கறையில்லாமல் ஒதுங்கி நின்றனர். இவர்களது நிலைமை கண்டு மனம் தாங்காமல் மன்னர் பகதூர்ஷா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர் மற்றும் ஆழ்வார் போன்ற பல பிரதேச மன்னர்களுக்கு விடுத்த கடிதத்தைப் பாருங்கள்:

“எந்தக் காரணத்தைக் கொண்டேனும், எவ்வழியிலேனும் ஆங்கிலேயர்களை நம் இந்துஸ்தானத்திலிருந்து வெளியேற்றியாக வேண்டுமென்பது தான் எனது மனப்பூர்வமான ஆசை. இந்துஸ்தானம் முழுவதும் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பது என் பேரவா. அதற்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சி போர் வெற்றிமுடி தரிக்க வேண்டுமானால், இந்த இயக்கத்தின் முழுப்பொறுப்பையும் நானே தாங்கிக் கொள்வதோடு, தேசத்தின் அனைத்துச் சக்திகளையும் ஒருங்குதிரட்டி, இந்திய மக்கள் அனைவரையும் தன்பால் அரவணைத்து கொண்டு, வழி நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்த ஒரு தலைவர் வேண்டும். அவ்வளவு நிர்வாகத் திறமை கொண்ட ஒரு தலைமை கிடைக்காவிட்டால் வெற்றி முடி தரிக்க முடியாமல் போய்விடும். ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அகில இந்தியாவையும் கட்டியாள நான் விரும்பவில்லை மன்னர்களே! எதிரியை விரட்டும் பொருட்டு, உரையில் இருக்கும் உங்கள் வாளை உருவ முன் வருவீர்களாயின், எனது ஆதிபத்திய உரிமைகளையெல்லாம் துறந்து விடுவதோடு, உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த இந்திய மன்னரிடமும் எனது பதவியையும், அதிகாரத்தையும் ஒப்படைத்து விடுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மாமன்னர் பகதூர்ஷாவின் சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட இக்கடிதம், எவ்வளவு தியாக சிந்தையையும், தலைசிறந்த தேசபக்தியையும் கொண்டிருக்கிறதென்பதை உணருகின்ற எந்த இந்தியன் தான் – விடுதலை வேட்கை கொண்ட எவன்தான் பகதூர்ஷாவுக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்தாமல் இருக்க முடியும்?

முதுமையும், பலவீனமும் உடையவராக இருந்ததால் அந்த யுத்தத்தைத் தானே நடத்திச் செல்வது தான் சக்திக்கு அப்பாற்பட்டதென மன்னர் பகதூர்ஷா உணர்ந்தார். ஆகவே, மூன்று இராணுவத் தளபதிகள் மற்றும் மூன்று பொதுமக்கள் தலைவர்கள் ஆகிய ஆறு பேர்கொண்ட யுத்த சபையை அமைத்து, அதனிடம் பொறுப்பு முழுவதையும் ஒப்படைத்தார். இந்தியா பரிபூரண சுதந்திரம் பெறுவதற்கான சரியான பக்குவத்தை அப்பொழுது அடையாத காரணத்தால், அவர்களுடைய முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்தன.

ஆனால், அந்த வயோதிகத் தலைவரிடம் குடிகொண்டிருந்த புரட்சிக் கனலின் தன்மை உச்சநிலை அடைந்திருந்தது. ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த ‘பரெய்லி’ நகரின் சுவர்களிலே ஒட்டப்பட்டிருந்த பகதூர்ஷாவின் பிரகடனமே அவரது மனப்பண்பை விளக்கும். அது வருமாறு:

‘இந்தப் போரில் ஈடுபட்டுள்ள நமது இராணுவத்தில் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை; சமத்துவமே பிரதிபலிக்கிறது. இந்தப் புனித யுத்தத்தில் யார் யார் வாளேந்துகிறார்களோ, அவர்கள் அனைவரும் சமமான பெருமை உடையவர்களே. எல்லாரும் சகோதரர்களே. அவர்களிடையே எந்தவித ஏற்றத் தாழ்வும் கிடையாது. ஆகவே, இந்தியச் சகோதரர்களே! எழுங்கள்! போர்க்களத்தில் குதியுங்கள்! இதுவே நம் தலை சிறந்த கடமை!”

இதுதான் மன்னர் பகதூர்ஷாவின் பிரகடனம். இவற்றையெல்லாம் நான் ஏன் இப்பொழுது குறிப்பிடுகிறேன் என்றால், நமது இந்திய தேசிய இராணுவத்திற்கான அடித்தளம் அந்த 1857ஆம் ஆண்டிலேயே இடப்பட்டுவிட்டதென்பதைச் சுட்டிக்காட்டத்தான். இந்தக் கடைசிப் போரின்போது, அந்த முதல் போர் கற்றுக் கொடுத்த பாடங்களும், அதன் தோல்வி அனுபவங்களும் நம் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இருக்கின்றன.

இப்பொழுது இறையருள் நம் பக்கமே இருக்கின்றது. பல போர் முனைகளில் நம் எதிரி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான். நம் தேச மக்கள் விழிப்புற்றுள்ளனர். நமது ஆஸாத் ஹிந்த் இராணுவம் எல்லையற்ற சக்தி கொண்டது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடித்தாலும், நம் இராணுவமும், அதன் அதிகாரிகளும் தலைநிமிர்ந்து நின்று போராடும் ஆற்றல் பெற்றுள்ளனர். எனவே, இறுதி வெற்றி நமக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

1857ஆம் ஆண்டுப் புரட்சி தோற்ற பின்னர், பிரிட்டானியர் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் படிக்கும் பொழுதும், அவற்றை நினைக்கும் போதும் என் இரத்தம் கொதிக்கத் தொடங்குகிறது. நாம் மனிதர்களாக இருந்தால், 1857 லும், அதற்குப் பின்னரும் நம் வீரர்களுக்கு நேர்ந்த கதிக்குப் பழி தீர்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும். பிரிட்டானியரின் மிருகத்தனத்திற்கு அவ்வீரர்கள் ஆளாகி, அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, அவற்றை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. பிரிட்டிஷார் யுத்தக் களத்தில் மட்டுமல்ல, அதன் பின்னரும் கூட விடுதலையை விரும்பிய எண்ணிலடங்கா இந்தியர்களின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்.

மனிதத் தன்மையே இல்லாமல் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லித்தான் தீரவேண்டும்; நாம் பழிவாங்கித்தான் தீரவேண்டும். இந்தியா விரும்புவதெல்லாம் பழிக்குப்பழி என்பதுவே! இந்தியர்களாகிய நமக்கு நம் ஜென்மப் பகைவர்களான பிரிட்டானியர் மீது இன்னும் அவ்வளவு வெறுப்பு வளரவில்லை. உங்கள் தேசத்தவர் நிமிர்ந்து நின்று, மனித சக்திக்கு மீறிய வீரத்துடன் திகழ வேண்டுமென விரும்பினால், நீங்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தேசத்தின்மீது அன்பு செலுத்துவதற்கு மட்டும் கற்றுக் கொடுத்தால் போதாது; பகைவனை வெறுக்கவும் கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே, நான் உங்களை இரத்தம் சிந்த அழைக்கிறேன்! நம் பகைவனைப் பழிவாங்க அழைக்கிறேன்! இரத்தத்திற்கு இரத்தம்! இதுவே என் போர் முழக்கம்! நம் எதிரி அன்று செய்த கொடுமைகளுக்கெல்லாம், அவன் இன்று சிந்தும் இரத்தம் தான் ஈடுசெய்ய முடியும். நாம் நமது இரத்தத்தைச் சிந்தத் தயாராக இருந்தால் தான், அவர்களின் இரத்தத்தைச் சிந்த வைக்க முடியும். எனவே, நம் எதிகாலத் திட்டம் இரத்தம் சிந்துவதே ஆகும். இந்த யுத்தத்தில் நமது வீரர்கள் சிந்தும் இரத்த ஆறு நமது பழைய பாவங்களையெல்லாம் அடித்துச் சென்று விடும்! நம் வீரர்களின் இரத்தமும், வீரமும், தைரியமும்தான் அந்த அன்னியரை, ஆக்கிரமிப்பாளரான பிரிட்டானியரை வஞ்சம் தீர்த்துப் பழிவாங்க, இந்திய மக்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறாகும்.

இன்று நாம் சிந்தும் இரத்தம் தான் நமது பழியைத் தீர்த்து, நம்முடைய வருங்காலப் பரம்பரையை ஒளிவீசிப் பிரகாசிக்கச் செய்யும்! வயோதிக பகதூர்ஷாவின் தோல்வியில், அவருடைய தீர்க்க தரிசனம் போட்டிருக்கும் வெற்றிக் கோலமும் ஒளி வீசுவதைப் பாருங்கள்! ஜெய் ஹிந்த்!

நன்றி : சிவலை இளமதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...