”தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த உடன், அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும்” என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள கோவில்கள் மற்றும் ஆன்மிக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநாடு மற்றும் கண்காட்சி திருப்பதியில் நடந்தது.
58 நாடுகளில் இருந்து ஹிந்து, சீக்கியம், பவுத்தம் மற்றும் ஜைன மதங்களை சேர்ந்த ஆன்மிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவில் கலாசாரம், பண்பாடு, பராமரிப்பு, நிர்வாகம், பக்தர்கள் மற்றும் அரசுகளின் பங்கேற்பு குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன.
மாநாட்டில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் ஹிந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். அரசின் பிடியில் இருந்து கோவில்கள் முற்றிலும் விடுவிக்கப்படும்.
இந்த மாநாடு கடந்த ஆண்டு காசியில் நடைபெற்றது. தற்போது திருப்பதியில் நடைபெறுகிறது.
கடந்த 250 ஆண்டு காலத்தில் நாம் என்ன இழந்தோமோ அவற்றை பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் மீட்டெடுக்க வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சந்தை மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி இருக்கும். இது சர்வ தேச மற்றும் நம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் மதிப்பை விட அதிகம்.
ஆனால், பல இந்து கோவில்களின் வருமானம், அரசின் ஹிந்து சமய அறநிலைத்துறையால் சீரழிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கோவில்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும். அவை தன்னிச்சையாக செயல்பட வேண்டும்.
ஏழுமலையானின் அருளாலும், மக்களின் நம்பிக்கையாலும் பா.ஜ., ஆட்சி மலர்ந்ததும் தமிழகத்தில் உள்ள 44,121 கோயில்களும் ஹிந்து சமய அறநிலைத்துறையின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும். கோயில்களுக்கு வரும் வருமானங்களை வைத்து, அப்பகுதியில் கல்வி நிறுவனங்கள், உள் கட்டமைப்பு போன்றவற்றை ஏற்படுத்த முடியும்.
சோழர்களின் காலத்தில் கோவில்கள் பல கட்டப்பட்டன. அவை நம் நாட்டின் கலாசாரத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |