இந்தியா – தாய்லாந்து இடையேயான உறவை, பல்துறை உறவாக உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி – தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி அமைப்பின் ஆறாவது மாநாடு, இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நேற்று சென்றார்.
மோடியை வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரேவுடன், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக, பிரதமர் மோடி பேசினார்.
இந்த பேச்சின்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாட்டுக்கும் இடையேயான துாதரக உறவை, பல்துறை ஒத்துழைப்பு உறவாக உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்த கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, குஜராத்தின் லோதாலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் கட்டுவது, எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துடன், கல்வி, கலாசாரத்தில் இணைந்து செயல்படும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாக, அனைவருக்குமான சட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்துவதில் எப்போதும் ஆதரவாக இருக்க இரு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துக்கு இடையே சுற்றுலா, கலாசாரம் மற்றும் கல்வியில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதுபோல, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகத்தில் பரஸ்பர வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.
இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே உள்ள பாரம்பரிய, கலாசார உறவுகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
புத்த மதத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, ராமாயணம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிம்ஸ்டெக் மாநாட்டின்போது, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால நிர்வாகத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் மின் ஆங்க் ஹிலாங்க் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
மியான்மரில் அரசை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதற்காக, ‘ஆசியான்’ எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்க மின் ஆங்க் ஹிலாங்கிற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா தவிர்த்து, கடைசியாக, 2021ல் இந்தோனேஷியாவுக்கு மின் ஆங்க் ஹிலாங்க் சென்றார். அதன் பின், தற்போது தாய்லாந்துக்கு அவர் சென்றுள்ளார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |